ETV Bharat / state

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 8:37 AM IST

KP Anbazhagan appears in court
சொத்து குவிப்பு வழக்கு

KP Anbazhagan appears in court: அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், வழக்கு விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். முன்னதாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் கே.பி.அன்பழகன் தனது பெயரிலும், மனைவி பெயரிலும், தனது உறவினர்கள் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக புகார்கள் வந்தன. இதனையடுத்து, தருமபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததாக வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து கே.பி.அன்பழகன் வீடு, உறவினர்கள் வீடு, அவருக்குச் சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கே.பி.அன்பழகன் உள்பட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 10,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு போலீசார், தருமபுரி நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கே.பி.அன்பழகன் உள்பட 11 பேர் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பபட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று (நவ.6) தருமபுரி நீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன் சசி மோகன், உறவினர் சரவணன், மாணிக்கம், தனபால் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து, நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான நிலையில், வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மிசோரம் சட்டமன்றத் தேர்தல் 2023; வாக்குப்பதிவு தொடங்கியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.