ETV Bharat / state

தருமபுரியில் கடும் சரிவை கண்ட பூக்கள் விலை.. ஆயுத பூஜை சிறப்பாக இல்லை என விவசாயிகள் கவலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 5:43 PM IST

தருமபுரியில் கடும் சரிவை கண்ட பூக்கள் விலை
தருமபுரியில் கடும் சரிவை கண்ட பூக்கள் விலை

Dharmapuri Flower Market: ஆயுத பூஜையையொட்டி, தருமபுரியில் பூக்களின் விலை நேற்றைய (அக்.22) விலையை விட இன்று (அக்.23) பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தருமபுரியில் கடும் சரிவை கண்ட பூக்கள் விலை

தருமபுரி: பாலக்கோடு, மாரண்டஹள்ளி பகுதியைச் சுற்றி 30 கி.மீ. தொலைவுக்கு, நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாமந்தி பூ சாகுபடி செய்து வருகின்றனர். ஏப்ரல் மாதம் சாகுபடிப் பணிகளைத் தொடங்கும் இப்பகுதி விவசாயிகள், செப்டம்பர் மாதத்தில் பூக்களை அறுவடை செய்கின்றனர்.

அறுவடை செய்த பூக்களை தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பூ சந்தையில், விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கோவை, திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, சேலம், தருமபுரி, வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் சாமந்திப் பூக்களை கொள்முதல் செய்வது வழக்கம்.

ஆனால் தற்போது பூக்களின் விளைச்சல் அதிகரிப்பால், பூக்களின் விலையில் கடுமையான சரிவு எற்பட்டுள்ளது. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைக்காக வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வழிபாட்டுக்காக பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும். இதையடுத்து விளைச்சல் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது பூக்களின் தேக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலையும் கடும் சரிவை கண்டுள்ளது.

தருமபுரி பூ சந்தையில் நேற்று (அக்.22) ஒரு கிலோ சாமந்தி 160 ரூபாய் முதல் 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று (அக்.23) தரத்திற்கு ஏற்ப 60 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. அதேபோல, 60 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கு விற்பனையான செண்டு மல்லி தற்போது 20 ரூபாய்க்கும், 170 முதல் 180 ரூபாய் வரை விற்பனையான சம்பங்கி இன்று (அக்.23) 100 ரூபாய் முதல் 80 ரூபய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (அக்.22) 600 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சன்னமல்லி விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று (அக்.23) 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் குண்டு மல்லி இன்று 400 ரூபாய்க்கும், காக்கடா 240 ரூபாய்க்கும், அரளி 350 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்கும் விலை குறைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து நேற்று(அக்.22) பன்னீர் ரோஸ் 200 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று (அக்.23) 100 முதல் 80 ரூபாயாக விலை குறைந்துள்ளது. திருமண மாலைகளுக்கு பயன்படுத்தும் தாஜ்மஹால் ரோஸ் 20 பூ கொண்ட ஒரு கட்டு 500 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக குறைந்துள்ளது. ஆயுத பூஜைக்கு பூக்கள் நல்ல விலைபோகும் என நம்பி, பூ சந்தைக்கு பூக்கள் கொண்டு வந்த விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையும் படிங்க: தீபாவளி ஸ்பெஷல்.. சர்க்கரை வள்ளிக்கிழங்கு வெச்சு பாயாசம்… ட்ரை பண்ணி பாருங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.