தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வட்டுவன அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோட்டூர் மலை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களுக்கு சாலை வசதி இல்லாததால் நான்கு கிலோ மீட்டர் செங்குத்தான மலைப் பாதையில் நடந்து சென்று வருகின்றனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது இந்தப் பகுதி மக்கள் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து புறக்கணித்தனர்.
கரோனா காலத்தில் இப்பகுதி மக்களை சந்தித்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அப்பகுதி மக்கள் தங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், மத்திய வனத்துறை அமைச்சகம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் போன்ற துறைகளுக்கு கடிதம் வழியாக தனது முயச்சிகளை மேற்கொண்டு உள்ளார்.
இதையும் படிங்க: அச்சுறுத்தும் மக்னா யானை: குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் - முதலமைச்சருக்கு கோரிக்கை!
அதோடு மட்டும் நில்லாமல், நேரடியாக சென்றும் இப்பகுதி மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர முயற்சிகளை மேற்கொண்டார். இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு கோட்டூர் மலை கிராமத்திற்கு 3.75 மீட்டர் இடைவெளியில் 4 கிலோ மீட்டர் தொலைவில் சாலை அமைக்க மத்திய வனத்துறை அனுமதி அளித்து உள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி உணவுப் பொருட்கள் மற்றும் வாக்களிக்க தேவையான மின்னணு வாக்கு பெட்டிகள் அனைத்தும் கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சாலை வசதி பற்றிய அறிவிப்பு கோட்டூர் கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாருக்கு கோட்டூர் கிராமப் பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். இதனை அடுத்து இன்று மலை கிராமத்திற்கு சென்ற தர்மபுரி எம்.பிக்கு மலை கிராமத்தை சேர்ந்த மக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து மேளதாளம் முழங்க வரவேற்று தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தர்மபுரி எம்.பி செந்தில் குமாரின் இந்த செயல் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது. பொதுமக்கள் மத்தியில் பேசிய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் பிரதம மந்திரியின் கிராம சாலை திட்டத்தின் கீழ் சாலை அமைத்து தருவதாக கிராம மக்களுக்கு உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: அடிச்சான் பார் அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர்...ரோஸ்கர் மேளாவில் 247 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிய மத்திய நிதிமைச்சர்