கவுன்சிலிங் வெறும் கண்துடைப்பா? - முறைகேடு நடைபெறுவதாக காணொலி வெளியிட்ட மாணவர்கள்

author img

By

Published : Oct 14, 2021, 6:28 AM IST

1

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு கலந்தாய்வில் முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, முறைகேடு நடைபெறுவதாகக் கூறி காணொலி ஆதாரம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி: தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு கலந்தாய்வில் முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மாதம் இளங்கலை மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாகக் கூறி இரவு 9 மணி வரை மாணவர்கள் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

கடந்த திங்கள் கிழமை (அக். 11) கலந்தாய்வில் முறைகேடு நடப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். தற்போது கலந்தாய்வில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி காணொலி ஆதாரம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணொலி வெளியாகி பரபரப்பு

காணொலியில் மூன்று மாணவர்கள் கல்லூரி மாணவர் சேர்க்கை அலுவலகத்தின் வெளியே காத்திருக்கின்றனர். அங்கிருந்த மாணவரிடம் கல்லூரி அட்மிஷன் எப்போது போடப்பட்டது என்று கேட்க அவர், நேற்றுதான் அட்மிஷன் போட்டாங்க எனச் சொல்ல எந்தக் கட்சி பரிந்துரை என மற்றொரு மாணவர் கேட்கிறார். வேறு ஒரு நபர் மூலமாக அட்மிஷன் கிடைத்ததாகக் கூறுகிறார்.

முறைகேடுகளை காணொலி பதிவுசெய்து வெளியிட்ட மாணவர்கள்

மாணவர் சேர்க்கை அலுவலகத்தின் உள்ளே உள்ள பேராசிரியர்களின் பரிந்துரை எனப் புதிதாகச் சேரக்கூடிய மாணவர் ஒருவர் தெரிவித்தார். எந்தப் பேராசிரியர் எனக் கேட்க மழுப்பலாகப் பதில் சொல்கிறார்கள்.

மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை

கலந்தாய்விற்கு வரக்கூடிய மாணவர்களை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காத்திருக்க வைத்துவிட்டு ஒரு சில இடங்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்திவிட்டு மற்ற மாணவர்களை சோ்க்கை முடிந்துவிட்டதாகக் கூறி அனுப்பிவைக்கின்றனர். பேராசியர்கள் தங்களுக்குத் தேவையான நபர்கள், இடைத்தரகர்கள் மூலம் தங்களை அணுகும் மாணவர்களுக்குச் சேர்க்கை வழங்கிவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு கலைக்கல்லூரிகளில் கலந்தாய்வில் முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, முறையாகக் கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கைவைக்கின்றனர்.

கல்லூரி முதல்வா் விளக்கம்

காணொலி குறித்து தருமபுரி அரசு கல்லூரி முதல்வா் கிள்ளிவளவனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, காணொலி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் இடம் கிடைக்காத சில மாணவா்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டுவருகின்றனர். கல்லூரி மாணவா் சோ்க்கை குறித்த முழு விவரங்களை கல்லுரி இணையதளத்தில் வெளியிட உள்ளோம். வெளிப்படைத் தன்மையுடன் சோ்க்கை நடைபெற்றதாக கல்லூரி முதல்வா் கிள்ளிவளவன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மருத்துவர் சுப்பையா கொலை விவகாரம்: தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.