வேளாண் சட்டத்திற்கு எதிரான தீா்மானம்: அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமா?

author img

By

Published : Aug 30, 2021, 8:17 PM IST

மத்திய வேளாண் சட்டதிருத்த மசோதாவிற்கு எதிரான தீா்மானம்

அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீா்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சா் கே.பி. அன்பழகன் குற்றஞ் சாட்டியுள்ளார்.

தருமபுரி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து முன்னாள் வேளாண்மை, உயர் கல்வித் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் செய்தியாளா்களை சந்தித்துப் பேசினார.

அப்போது, "தமிழ்நாடு சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீா்மானம் அவசரமாக நிறைவேற்றத் தேவையில்லை. உச்ச நீதிமன்றத்தில் வேளாண் சட்டங்களின் மீது தடையாணை உள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் முடிவெடுப்போம் என்றும், அனைத்துக் கட்சியும் கூட்டம் கூட்டி, அதோடு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் சேர்த்து மூன்று வேளாண் சட்டத்திருத்தத்தில் சாதக பாதகங்களை அறிந்து எதை ஏற்றுக்கொள்ளலாம், எதை திருத்தம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறோமோ, அதனைத் திருத்தம் செய்யலாம் என்று அதிமுக சார்பில் தெரிவித்தோம்.

விவசாயிகளை காக்கின்ற வகையில்..

அதற்கு செவி சாய்க்காமல் நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறார்களா? அல்லது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? என்று ஏளனமாக கேள்வி கேட்டார்கள். 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் ஏற்கெனவே இயற்றப்பட்ட சட்டத்தில் விவசாய பெருமக்களை காக்கின்ற வகையில், அவர்கள் உற்பத்தி செய்கின்ற பொருள்களை, அவர்கள் விலை நிலங்களிலேயே விற்பனை செய்து கொள்ளலாம் என்று அனுமதி உள்ளது.

முன்னாள் அமைச்சா் கே.பி. அன்பழகன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி

வெளிச் சந்தையில் கொண்டுவந்து விற்கும்பொழுது போக்குவரத்துக்கு பணம் செலவாகிறது. மத்திய அரசு 2020ஆம் ஆண்டில் இயற்றியுள்ள சட்டத்தின் சாதக பாதகங்களை அறிந்து முதலமைச்சர் தலைமையில், பிரதமரிடம் முறையீட்டு திருத்தம் கொண்டுவர வழிவகை செய்யலாம் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தினோம்.

அதனை ஏற்காத காரணத்தினால் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம். விவசாய மக்களுக்கு அதிமுக துரோகம் செய்தது என்பது தவறானது.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ..

தமிழ்நாட்டிலுள்ள விவசாய மக்களுக்கு நன்றாகத் தெரியும் அதிமுக எப்பொழுதும் விவசாயிகளை காக்கின்ற இயக்கம் என்று. திமுக ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கொண்டுவந்து பாதிப்பை ஏற்படுத்தியது, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது திமுகதான்.

விவசாயிகளுக்கு பாதிப்பு வரும் என்பதால், அதனை ரத்து செய்தவர் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, விவசாயிகளை காப்பாற்றியது அதிமுக.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை சட்டப் போராட்டம் நடத்தி அரசிதழில் வெளியிட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் இயக்கம்தான் அதிமுக.

காழ்ப்புணர்ச்சி காரணமாக..

வெளிமாநிலங்களில் இடைத்தரகர்கள் அதிகம் இருப்பதால், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 8.5 விழுக்காடு செஸ் வரி விதிக்கப்படுகிறது. இதில், 2.5 விழு்ககாடு இடைத்தரகர்களுக்கு லஞ்சம் செல்கிறது. மீதமுள்ள 6 விழுக்காடு, மாநில அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது.

8.5 விழுக்காடு வரி வணிகர்கள் மீது திணிக்கப்படுகிறது. வணிகர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்குகிறார்கள். இடைத் தரகா்கள் தூண்டுதல் காரணமாக வெளி மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே உள்ள சட்டம் மூலமாக 2019ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் மூலமாக ஒரு விழுக்காடு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.

ஒரு விழுக்காடு வரியும் அரசுக்குத் தான் வருவாயாக வருகிறது. காழ்ப்புணர்ச்சி காரணமாக வேளாண் சட்டத்தை பெரிதுபடுத்தி தனி தீர்மானமாக நிறைவேற்றி, விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக இல்லாதது போல காட்டிக்கொள்ள திமுகவினர் முயற்சி செய்கிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: 'எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்காக கட்டப்பட்ட விடுதிக் கட்டடங்களை திறந்துவைத்த ஸ்டாலின்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.