ETV Bharat / state

வனப்பகுதியில் பிறந்த குழந்தை.. தருமபுரி சிட்லிங் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் வசதியை மேம்படுத்திட மலைக் கிராம மக்கள் கோரிக்கை..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 4:43 PM IST

hill village woman gave birth in the forest area
வனப்பகுதியில் பிரசவித்த மலைக் கிராமப் பெண் - அடிப்படை வசதியை மேம்படுத்திடக் கோரிக்கை

Hill village woman gave birth in the forest area: தருமபுரி மாவட்டம் சிட்லிங் ஊராட்சியில் அடிப்படை வசதி இல்லாததால், வனப்பகுதியில் குழந்தை பிறந்தது. மலைக் கிராமம் என்பதால் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது. எனவே உடனடியாக அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்திடப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி: சேலம் மாவட்டம், நெய்ய மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின கர்ப்பிணிப் பெண் ராஜகுமாரி (25) ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சிட்லிங் ஊராட்சி வேலனூர் கிராமத்திற்கு அவரது கணவர் கோவிந்தராஜின் அக்கா வீட்டிற்கு உறவு முறையாக வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (டிச.14) காலை சுமார் 10 மணி அளவில் கர்ப்பிணியான ராஜகுமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை அவரது கணவர் கோவிந்தராஜ் சிட்லிங் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது, அங்கு மருத்துவர் இல்லாத நிலையில் பணியிலிருந்த கிராம சுகாதார செவிலியர் தன்னால் பிரசவம் பார்க்க இயலாது என்று சொல்லி, கர்ப்பிணியான ராஜகுமாரியை திருப்பி அனுப்பி விட்டார். இதனால், 25 கி.மீ தூரத்தில் உள்ள தும்பல் கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.

இதன்படி, அந்த கர்ப்பிணிப் பெண் தனியார் வாகனம் மூலம் தும்பல் செல்வதற்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளார். வழியில் அவருக்குப் பிரசவ வலி அதிகரிக்கவே வண்டியை நிறுத்தி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அங்கேயே அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உதவியால் ராஜகுமாரிக்கு குழந்தை பிறந்தது.

அதன் பிறகு, வேலனூர் கிராமத்தைச் சேர்ந்த அமுதா என்பவர் அவர்களை அழைத்துக் கொண்டு சேலம் மாவட்டம், தும்பல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பழங்குடியின பெண்ணுக்கு நேர்ந்த இந்த அவலம் குறித்து சிட்லிங் ஊர் பொதுமக்கள் நேற்று (டிச 15) சிட்லிங் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவ அலுவலரிடம் புகார் அளித்தனர்.

அப்போது, நிரந்தரமான மருத்துவர் இல்லாததும் போதிய செவிலியர் இல்லாத காரணத்தினால் தான் இந்த அவலம் ஏற்பட்டுள்ளதாக ஊர் பொதுமக்கள் மருத்துவ அவர்களிடம் தெரிவித்தனர். மேலும், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வருக்கும் இது குறித்து ஊர் பொதுமக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர்.

இது குறித்து சிட்லிங் ஊராட்சியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் கூறுகையில், "40 கிராமங்களைக் கொண்டுள்ள சிட்லிங் ஊராட்சியில் சுமார் 20 ஆயிரம் கிராம மக்கள் வசித்து வரும் நிலையில் சிட்லிங் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் நிரந்தரமான மருத்துவர் வேண்டும் மற்றும் அவசர சிகிச்சைக்கு கோட்டப்பட்டி மற்றும் அரூர் கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வசதி வேண்டும். மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி மற்றும் பிரசவத்திற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாணியம்பாடியில் அரசு சிறுபான்மையினர் நல விடுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.. அடிப்படை வசதிகள் இல்லை என புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.