ETV Bharat / state

ஆழியாறு அணையில் இருந்து திமுக நிர்வாகிகள் தண்ணீர் திறந்து விட்டதாக விவசாய சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 10:54 AM IST

water-opening-from-azhiyar-dam-for-puthiya-ayakattu-irrigation
ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு..திமுக நிர்வாகிகள் திறந்து விட்டதாகக் குற்றச்சாட்டு!

ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு விவசாயப் பணிகளின் தேவைக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆழியாறு அணையில் இருந்து திமுக நிர்வாகிகள் தண்ணீர் திறந்து விட்டதாக விவசாய சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த அணையில் இருந்து குடிநீர் தேவைக்கும், ஒப்பந்தப்படி கேரளாவிற்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் மொத்தம் 44 ஆயிரத்து 350 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இரு மண்டலங்களாகப் பிரித்து பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு விவசாயப் பணிகளின் தேவைக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று ஆழியார் அணையில் இருந்து வேட்டைக்காரன் புதூர்,பொள்ளாச்சி பகுதி வாய்க்கால் மூலம் தண்ணீர் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆழியாறு அணையில் இருந்து வழக்கமாக தண்ணீர் திறக்கும்போது அமைச்சர், ஆட்சியர், உயர் அதிகாரிகள் அல்லது எம்எல்ஏக்கள் போன்றோர் தண்ணீர் திறந்து வைப்பது வழக்கம். ஆனால் வழக்கம்போல் அமைச்சர், அரசு அதிகாரிகள் எம்எல்ஏக்கள் யாரும் வராததால், ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் பாசன சபை தலைவர் தண்ணீர் திறப்பு விழாவிற்கு வந்திருந்தனர்.

ஆனால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் பொத்தானை அரசு அதிகாரிகள் திறக்காமல், திமுக கட்சியினரே பட்டனை அமுத்தி தண்ணீர் திறந்து வைத்து, அணையில் இருந்து வாய்க்கால் வழியாக வெளியே சென்ற தண்ணீருக்கு திமுகவினர் பூ தூவினார்கள். இதனால் பாசன சபை தலைவர்கள் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.

பின்னர் திமுக நிர்வாகிகளுக்கும், விவசாய சங்க நிர்வாகிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆழியார் அணையில் இருந்து 40 நாட்கள் இடைவெளி விட்டு, 26 நாட்களுக்கு 831 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கபடுகிறது. இதன் மூலம் ஆழியார், சேத்துமடை, வேட்டைகாரன்புதூர் பகுதியில் உள்ள 22 ஆயிரத்து 332 ஏக்கர் பாசனம் பெற உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முறைகேடாக ரேஷன் பொருட்களை விற்றதாக புகார்.. வெற்றிலை போட்டவாறு கூலாக பதிலளித்த ஊழியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.