கடலூர்: சிதம்பரம் அருகே துணிசிரமேடு கிராமத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. புவனகிரி, காட்டுமன்னார் கோயில், சிதம்பரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். எனவே, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பள்ளிப் பேருந்து இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (அக்.26) வழக்கம்போல் பரங்கிப்பேட்டையில் உள்ள மாணவர்களை ஏற்றி, தீர்த்தம்பாளையம் பகுதியில் இருந்து பள்ளிப் பேருந்து வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது பேருந்தில் இருந்து திடீரென புகை ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த ஓட்டுநர் முருகன், மாணவர்களை உடனடியாக கீழே இறக்கி விட்டு விட்டு, அவரும் இறங்கி உள்ளார்.
இதனை அடுத்து பேருந்தில் இருந்து அதிகளவு புகை வெளிப்பட்டு, பேருந்து தீப்பற்றி எரியத் தொடங்கி உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், தீயை அணைப்பதற்கு முயற்சி செய்துள்ளர். ஆனால், தீயை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், பரங்கிப்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சுற்றுலாவின்போது வழி தவறிய உ.பி மூதாட்டி.. உறவினர்களுடன் சேர்த்த கடலூர் போலீசார்!
இந்த தகவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறை நிலை அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான தீயணைப்புத் துறையினர், சுமார் அரைமணி நேர போராட்டத்திற்குப் பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், பள்ளி வாகனம் முழுமையாக எரிந்து சேதமானது. இந்த விபத்தால் சிதம்பரம் - கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அன்பழகன் மற்றும் பரங்கிப்பேட்டை போலீசார், தீ விபத்து குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பேருந்தில் இருந்து புகை வந்தவுடனேயே முன்னெச்சரிக்கையாக வாகனத்தை நிறுத்தி, ஓட்டுநர் மாணவர்களை வெளியேற்றிதால் நிகழவிருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆட்டோவில் வந்து ஆவின் பாலை அபேஸ் செய்த கொள்ளையர்கள் - வைரலாகும் வீடியோ!