ETV Bharat / state

அதிமுக தொண்டனுக்கு தெரிந்தது ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு தெரியவில்லை!

author img

By

Published : Mar 24, 2021, 6:36 PM IST

கடலூர்: மோடி படத்தை காட்டினால் ஓட்டு கிடைக்காது என்பது அதிமுக தொண்டனுக்கு தெரிந்திருக்கும்போது, எடப்பாடிக்கும், ஓபிஎஸ்க்கும் ஏனோ தெரியவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

cpm
cpm

கடலூரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது, ”அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருப்பது போன்று தோற்றமளித்தாலும், அவர்கள் பாஜக கொடியையோ, மோடி படத்தையோ தவிர்ப்பதாகவே கூறப்படுகிறது. மோடியைக் காட்டினால் ஓட்டு கிடைக்காது என்பதை அதிமுகவின் தொண்டன் தெரிந்து வைத்திருக்கிறான். ஆனால், எடப்பாடிக்கும், ஓபிஎஸ்க்கும் ஏனோ தெரியவில்லை.

பண பலத்தை நம்பியே அதிமுக கூட்டணி தேர்தல் களத்தில் உள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படாமல் எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையில் சோதனையிடுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். அதில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபேட்டில் வரும் காகிதத்தையும், ஓட்டு எண்ணிக்கையின் போது கணக்கிட்டுக் கொள்ள வலியுறுத்தி உள்ளோம். அப்போது தான் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.

அதிமுக தொண்டனுக்கு தெரிந்தது ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு தெரியவில்லை!

பூரண மதுவிலக்கு என்பது குறித்து திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்காத நிலையிலும், படிப்படியாக மதுவிலக்கு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, எங்கள் கூட்டணியில் எந்தவித கொள்கை வேறுபாடும் இல்லை. திமுக வெற்றி பெற்றால் தனித்து தான் ஆட்சி அமைக்கும். கூட்டணியில் பங்குபெறும் வலிமை பெற்றிருந்தால் மட்டுமே மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்கும். அதனை விடுத்து கூட்டணி ஆட்சி என்றவுடன் சென்று ஒட்டிக்கொள்வது கிடையாது” என்றார்.

இதையும் படிங்க: இது திமுக-அதிமுக யுத்தமல்ல: எம்ஜிஆரின் சைதைக்கும் கருணாநிதியின் மா.சு.வுக்குமான தேர்தல் போர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.