ETV Bharat / state

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பல கோடி மோசடி - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 3:36 PM IST

multi-crore-fraud-in-farmer-protection scheme-woman-operator with 5-people-arrest at cuddalore
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பல கோடி மோசடி -கைது செய்யபட்ட 5 போர்

Family involved in Farmers Protection Scheme Fraud: முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.4.5 கோடி மோசடி செய்த கணினி பெண் ஆபரேட்டர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர்: திட்டக்குடி அருகே உள்ள எறையூரை சேர்ந்த பத்மினி, பெண்ணாடம் பகுதியை சேர்ந்த தேவகி ஆகிய 2 பேரும் தங்களது கணவர் இறந்து விட்டதால் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், 6 மாதங்களுக்கு மேல் மனு கொடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். இந்த மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், கடலூர் கோட்டாட்சியரை விசாரணை அலுவலராக நியமித்து மனு குறித்து விசாரணை செய்து நிவாரணத் தொகையை வழங்க உத்தரவிட்டார். அதன்படி கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு அவர்களின் ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்களை பெற்று திட்டக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகத்தில் விசாரணை நடத்தி, இணைய தள விவரங்களை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, கடந்த 4 மாதங்களுக்கு முன்பே அவர்கள் 2 பேருக்கும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பணம் பெற்றுள்ளதாக தகவல் தெரிய வந்தது. தொடர்ந்து உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிவாரண தொகை வழங்கிய பட்டியல், மாவட்ட கருவூல அலுவலகத்தில் பணம் வழங்கப்பட்ட ஆவணங்களை வாங்கி கோட்டாட்சியர் சோதனை செய்தார்.

அப்போது, அவர்கள் 2 பேரின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பவில்லை என்றும், பயனாளிகள் அல்லாத வேறு நபர்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் இதே போல் வேறு பயனாளிகளுக்கு நடந்துள்ளதா என ஆய்வு செய்த போது மொத்தமாக 42 முறை சம்பந்தப்பட்டவர் அல்லாத வேறு ஒருவரின் வங்கி கணக்குகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நிவாரணத் தொகை மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்ததுள்ளது.

இது பற்றி கடலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ரமா, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் புகார் அளித்தார். அதில், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.4.5 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட கணினி ஆபரேட்டர் அகிலா (வயது 30) உள்பட 9 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து காவல்துறை நடத்திய விசாரனையில் அகிலா மற்றும் அவரின் குடும்பத்தை சேர்ந்த வினோத்குமார், பாலகிருஷ்ணன், மணிவண்ணன், விஜயா ஆகிய 5 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணினி ஆபரேட்டர் அகிலா, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகள் இல்லாத தனது கணவர் வினோத்குமார் உள்பட 8 பேரின் பல்வேறு வங்கி கணக்கிற்கு ரூ.4 கோடியே 62 லட்சத்து ஆயிரத்து 781 பணத்தை செலுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட அகிலா 8 மாத கர்ப்பிணி என்பதால் அவரை போலீசார், ஜாமீனில் விடுவித்துள்ளனர் மற்ற 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் மோசடி செய்து பெற்ற பணத்தில் அகிலா குடும்பத்தினர் கார், நகை, சொத்துகள் வாங்கி குவித்துள்ளனர். முதற்கட்டமாக அவர்களிடம் இருந்து 2 கார், 1 சரக்கு வாகனம், ஜந்தரை பவுன் நகை, ரூ.68 ஆயிரத்து 500 ரொக்கம், 4 சொத்து பத்திரங்களின் நகல்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு சாதாரண கணினி ஆபரேட்டரால் ரூ.4.5 கோடி மோசடி செய்ய வாய்ப்பில்லை என்றும், இதில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சிறுமியை 8 நாட்களாக குளியலறையில் வைத்து பூட்டிய தம்பதி; போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.