ETV Bharat / state

"மனு நீதியா.. மனித நீதியா.. அரசியலமைப்புச் சட்டத்தை, பாஜக அரசு அவமதிக்கிறது" - கி.வீரமணி குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 10:08 AM IST

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி
திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி

Dravidar Kazhagam President Veeramani byte: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாஜக அரசு மதிக்கவில்லை என்றும் பாஜக மனித நீதியை பின்பற்றாமல் மனுநீதியை பின்பற்றுகிறது என்றும் திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரக்கோரி மக்கள் திரள் போராட்டம் சிதம்பரத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சிதம்பரம் வந்த திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுமக்களின் கோயிலாகும். ஆனால் இந்தக் கோயில் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே சொந்தமானது என்பது போல் ஒரு பிரிவினர் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக தொடர்ந்து மக்கள் போராட்டமும், சட்டப் போராட்டமும் நடந்து வருகிறது.

ஜெயலலிதா தலைமையில் நடந்த அரசு, தீட்சிதர்களுக்கு சாதகமாக இருந்ததால் கோயில் தொடர்பான வழக்கை சரியாக நடத்தவில்லை. இது குறித்தான விபரங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவதற்காகவே இன்று வந்திருக்கிறோம். இதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும். கோயில் நிர்வாக மேற்பார்வை அனைத்தும் அறநிலையத் துறையின் கீழ் வர வேண்டும். இது மனித ரீதியான, சட்ட ரீதியான பிரச்சினை. அதனால் நாங்கள் போராடுகிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அரசு மதிக்கவில்லை.

இதற்கு இன்றைக்கு வந்திருக்கிற ஒரு சம்பவமே உதாரணம். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு ‘தி கான்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியா’ என்று தான் பெயர். அதை மாற்ற அவர்களுக்கு உரிமை உண்டு என்றால் அதை சட்டப்படி நாடாளுமன்றத்தில் வைத்து மாற்றி இருக்க வேண்டும். ஆனால் குடியரசுத் தலைவர் மூலம் வந்திருக்கின்ற ஒரு அழைப்பிதழில் பாரத் பிரசிடென்ட் என்ற பெயர் இடம் பெற்று இருக்கிறது.

ஆகவே, பிரமாணம் எடுத்துக் கொண்ட அரசியல் சட்டத்தை, இந்த ஆட்சி மதிக்காமல் அவமதிக்கிறார்கள். மனுநீதியிலே பாரத் என்று இருக்கிறது. அவர்கள் மனுநீதியை பின்பற்றுகிறார்களே தவிர மனித நீதியை பின்பற்றவில்லை என்பது தெரிகிறது. அவர்கள் சட்டத்தை மதிக்கவில்லை. சிதம்பரம் நடராஜர் கோயிலை எந்த அரசன் எப்போது தானமாக கொடுத்தார்.

தீட்சிதர்கள் என்பவர்கள் இங்கே இருந்தவர்கள் இல்லை. வெளியில் இருந்து வந்தவர்கள். எந்த மன்னரும் இந்த கோயிலை தீட்சிதர்களுக்கு கொடுக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்புகளில் கூட கோயில் இவர்களுக்கு சொந்தமில்லை என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது ஒரு பொது கோயில் என்று தான் தீர்ப்பில் இருக்கிறது.

கோயில் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இறுதி விசாரணையின் போது தமிழக அரசால் சரியான வாதங்கள் வைக்கப்படவில்லை. அதனால் தான் அந்த வழக்கை மறு விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என கூறுகிறோம்" என்று கி. வீரமணி கூறினார்.

இதையும் படிங்க: "ஒரே நாடு, ஒரே சுடுகாடு வரட்டும்"... அப்புறம் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" குறித்து முடிவு - எம்.பி. எம்.எம்.அப்துல்லா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.