கோவை: மத்துவராயபுரம் பகுதியைச் சேர்ந்த ரமணி (வயது 20) என்ற இளம்பெண் மற்றும் சஞ்சய் (வயது 20) ஆகிய இருவரும் கடந்த 6 ஆம் தேதி வேளாங்கண்ணியில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு சஞ்சய் பெற்றோர் சம்மதம் தெரிவித்து உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் ரமணி, சஞ்சய் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சஞ்சய் அடிக்கடி கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியுடன் செல்போனில் பேசி வந்து உள்ளார். இதனால் ரமணிக்கும் சஞ்சய்க்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை (29/05/2023) வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் சஞ்சய் ரமணியின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்துள்ளார். இதில் ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து அந்த கொலையை மறைப்பதற்காக தனது தந்தை மற்றும் தாயாரின் உதவியுடன் ரமணியின் உடலில் மஞ்சள் பொடியை கரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்து மாற்று துணிகளை அணிவித்து சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளனர். இதனை அறியாமல் அக்கம் பக்கத்தினர் புளி கரைசலை கரைத்து ரமணியின் வாயில் ஊற்றியுள்ளனர்.
பின்னர் ஆலாந்துறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரமணியின் உடலை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் பூலுவம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் பரிசோதித்து தெரிவித்து உள்ளனர். இதையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் இது குறித்து ரமணியின் தந்தை கருப்புசாமிக்கு தகவல் அளிக்கப்பட்டது. ரமணியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது உயிரிழப்பிற்கு சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணமாக இருப்பார்கள் என கருப்புசாமி ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
புகாரின் பேரில் சஞ்சய் மற்றும் அவரது தந்தை லட்சுமணன் (வயது 50), தாயார் அம்முக்குட்டி (எ) பக்ருநிஷா (வயது 47) ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். முதலில் இது சந்தேக மரணம் என்பதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் பிரேத பரிசோதனை முடிவில் ரமணி கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மூவரிடமும் பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சஞ்சய் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து சஞ்சய் மற்றும் அவரது தாய் தந்தை மூவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை அடுத்து மூவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். காதல் திருமணம் செய்து கொண்ட சிறு நாட்களிலேயே இளம்பெண்ணை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: காதலை முறித்த ஆத்திரத்தில் கத்திக்குத்து... 12 முறை கத்தியல் குத்திய கொடூரம்!