ETV Bharat / state

குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் காவல் நிலையத்தில் மரணம்.. கோவையில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 7:04 PM IST

Etv Bharat
Etv Bharat

Coimbatore Police Custody Death: திருச்செந்தூர் குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் கோவை ஆலாந்துறை காவல் நிலையத்தில் விசாரணையின் போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூர்: கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே உள்ள மாணவாளபுரம் அம்மன்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி ரதி (32). இவர் கடந்த மாதம் 28-ஆம் தேதி குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் சென்றிருந்தார். அப்போது திலகவதி(வயது 40) என்பவருடன் ரதிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து திலகவதியுடன், ரதி திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது ரதியிடமிருந்து குழந்தையை பெற்றுக் கொண்ட திலகவதி திடீரென குழந்தையுடன் மாயமானார். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் நபர் ஒருவருடன் திலகவதி, குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து திருச்செந்தூர் போலீசில் ரதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் குழந்தையை கடத்திய திலகவதி கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்துள்ள முட்டத்துவயல் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார், ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், ஆலாந்துறை போலீசார் அங்கு சென்று, திருச்செந்தூரில் குழந்தையை கடத்திய சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த திலகவதி மற்றும் அவரது கணவர் பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் திருச்செந்தூரில் கடத்திய குழந்தை சேலம் ஆத்தூரில் இருப்பதாக கூறியதாக தெரிகிறது.

இதனிடையே திடீரென திலகவதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு காவல் நிலையத்திலேயே மயங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை போலீசார் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது திலகவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உடற்கூராய்விற்காக திலகவதியின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். போலீசாரின் விசாரணையில் இருந்த பெண் உயிரிழந்த விவகாரம் சம்பந்தமாக ஆலாந்துறை காவல் நிலையத்தில் தற்போது காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திலகவதி போலீசாரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டாரா? அல்லது அவருக்கு வேறு ஏதேனும் உடல்நலக் குறைபாடு இருந்ததா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ராஜீவ் காந்தி கொலை வழக்கு.. சாந்தனின் நாடு கடத்தல் வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி விலகல்! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.