ETV Bharat / state

நிர்வாகிகள் விலகலால் பாஜகவிற்குப் பாதிப்பு இல்லை - கெத்தாகப் பேசிய வானதி சீனிவாசன்!

author img

By

Published : Mar 7, 2023, 4:33 PM IST

நிர்வாகிகள் விலகலால் பாஜகவிற்கு பாதிப்பு இல்லை - வானதி சீனிவாசன்
நிர்வாகிகள் விலகலால் பாஜகவிற்கு பாதிப்பு இல்லை - வானதி சீனிவாசன்

வடமாநிலத்தொழிலாளர்கள் வீடியோ குறித்த விவகாரத்தில் முதலமைச்சர் முளையிலேயே கிள்ளி எரிந்திருக்க வேண்டும் எனவும், நிர்வாகிகள் விலகுவதால் தமிழ்நாடு பாஜகவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத்தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன், இன்று (மார்ச் 7) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய வானதி சீனிவாசன், ''வடமாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தமான வீடியோ பிரச்னைகள் குறித்து, மாநில அரசோ அல்லது முதலமைச்சரோ எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்ததனால், வடமாநிலத்தில் பல்வேறு போலி செய்திகளுடன் சேர்ந்து ஒரு பெரிய பிரச்னையாக இங்கு உருமாறி உள்ளது.

வடமாநிலத்தவர்களுக்கு ஹோலி பண்டிகையும் முக்கியமான பண்டிகை. அதற்குச் செல்வோரும் சென்று வரும் நிலையில், அவர்களது வீடுகளில் இந்த வீடியோ குறித்தான கருத்துகள் சென்றதால் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. முதலமைச்சரின் அமைச்சரவையைச் சார்ந்தவர்களே பல்வேறு சமயங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் பற்றியும், அவர்கள் செய்கின்ற வேலைகள் பற்றியும் கேவலமாகவும், நியாயம் கற்பிக்கின்ற வகையிலும் நடந்து கொள்கிறார்கள்.

இதை அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டியது முதலமைச்சர் தான். முதலமைச்சர் இதனை முளையிலேயே கிள்ளி எரிந்திருந்தால், இது போன்ற சூழல் தற்போது வந்திருக்காது. வடமாநிலத் தொழிலாளர்கள், குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் நிலையில், இந்தப் பிரச்னையை மாநில அரசு சரியாக கையாளாததால் அங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு இந்தப் பகுதிகளை பழி வாங்குகின்ற நோக்கத்தில் செயல்படுகிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் எந்த பிரச்னையினாலும் பாதிக்கப்படட்டும் என விட்டு விட்டார்களா என சந்தேகம் எழுகிறது. முதலமைச்சர் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுகின்ற வகையில் உணர்கிறார் என்றால், இந்த பிரச்னைக்கு மூலக் காரணம் யார்? இதற்கு முன் பத்து ஆண்டுகள் இது போன்று நடந்ததா?

இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு சமூக ஊடகங்களிலும், இவர்களது அமைச்சர்கள் வடமாநிலத் தொழிலாளர்களை குறிப்பிட்டு பானி பூரி, இந்தி பேசினால் வேலை கிடைக்குமா? எனத் தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக சிலர் பல்வேறு கருத்துகளைப் பரப்பி, வடமாநிலத் தொழிலாளர்கள் வருவதால்தான் தமிழ் மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை என வெறுப்புணர்வு பிரசாரத்தை தூண்டுபவர்களை வேடிக்கை பார்த்துவிட்டு, பிரச்னை வந்த பிறகு தனது ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என முதலமைச்சர் கூறினால், இதனை உருவாக்கியது நீங்கள்தான்.

தங்களிடம் இருக்கின்ற தோல்விகளை மறைத்துவிட்டு, அடுத்தவர்கள் மீது பழி போடுகின்ற முயற்சியை முதலமைச்சர் செய்யக்கூடாது. முதலமைச்சர், இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக யார் பேசினாலும் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார். அதில் உறுதியாக இருக்க வேண்டும். வட மாநிலங்களில் இருந்து வருபவர்களும் இந்தியர்கள்தானே. இந்தியர்களைப் பற்றி உங்கள் மாநில அமைச்சர்கள் பேசுவதை நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என சொன்னால், எதற்கு இன்னொருவர் மீது பழி போடுகிறீர்கள்?

இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியதும், இந்த விஷயத்தில் உறுதிப்பாட்டைக் காட்ட வேண்டியதும் நீங்கள்தான் (முதலமைச்சர்). மாற்றுக் கட்சிகளில் இருந்தும் எங்களது கட்சிக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிச்சென்ற ஐடி பிரிவு தலைவர் என ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் காரணங்கள் இருக்கலாம். அல்லது அவர்களுக்குள் ஏதேனும் விருப்பம் இருந்திருக்கலாம்.

ஆனால், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவிதப் பாதிப்பும் வரப்போவதில்லை. எங்களுடைய கட்சி அதிகமான புதிய நபர்களால் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு தேர்வு நடைபெறுகிறது என்றால், அந்த தேர்வுக்கு தயாராகி உள்ளவர்கள் அதில் கலந்து கொள்கிறார்கள். இதில் தமிழ்நாடு மாணவர்கள் குறைந்த அளவில் பங்கேற்பது குறித்து பிரதமரிடம் புகார் சொல்லி என்ன செய்வது?

ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்வுகளில் பங்கேற்கக் கூடிய மாணவர்களை மாநில அரசு தயார்படுத்த வேண்டும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்நாடு மாணவர்களுக்கு முன்னுரிமை தாருங்கள் எனக் கேட்பது, எந்த விதத்தில் சரியாக இருக்கும்? போட்டித் தேர்வுகளுக்கு தயாராக மாணவர்களை தயார்படுத்தி, அவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ளத் தயார் செய்வதை விட்டுவிட்டு, தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக அடுத்தவரிடம் கேட்பதுபோல் உள்ளது.

மேலும் தேசிய அரசியலுக்கு செல்வதாகக் கூறி வரும் நிலையில், தேசிய அரசியலில் பல்வேறு டீம்களை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே தேசிய அரசியலுக்கு செல்வதாக கூறினால் மட்டும் போதாது. தேசிய அரசியலில் இருக்கக்கூடிய தலைவர்கள் இடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அதற்கு அடிப்படையாக முதலில் தேசியத்தை நீங்கள் நம்புகிறீர்களா? தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகப் பேசுபவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்பதை எல்லாம் முதலில் செய்து காட்டுங்கள்.

அதன் பின்னர் தேசிய அரசியலுக்கு வாருங்கள். திமுக அமைச்சர்கள் கல்லெடுத்து எறிகிறார்கள், பெண்களை இழிவாகப் பேசுகிறார்கள், ஓட்டு போடுகின்ற மக்களை கேவலப்படுத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் எஜமானர்கள் என நினைத்துக் கொள்கின்றனர், ஓட்டு போட்ட மக்கள் அனைவரும் அடிமைகள் போன்று நடத்துகின்றனர். ஆனால், இவர்கள் சுயமரியாதை என பேசிக்கொண்டு காலில் விழும் கலாசாரத்தை கொண்டு வந்ததே இவர்கள்தான்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசு மாதிரி பள்ளிகளில் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.