ETV Bharat / state

G20 மாநாடு: 'ஆரம்பக் கல்வியில் தாய்மொழி என்பதே புதிய கல்விக்கொள்கை' - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

author img

By

Published : Mar 20, 2023, 5:21 PM IST

Etv Bharat
Etv Bharat

கோவையில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ‘தாய் மொழிக் கல்வியை ஆரம்பக் கல்வியில் கொடுப்பதே புதிய கல்விக்கொள்கையின் தாரக மந்திரமாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஜி20 இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் எல். முருகன், இந்தியாவின் ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த மாநாட்டில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கான கூட்டுக்கல்வி முறை என்ற தலைப்பிலும், பெண்களுக்கான அதிகாரம் மற்றும் தொழில் முனைவு என்ற தலைப்பிலும் இளம் தூதுவர்கள் கலந்துரையாடினர். இந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் எல். முருகன், ''கோவையில் ஜி20 மாநாடு நடைபெறுவது நமக்குப் பெருமை. இந்த மாநாட்டில் உலகின் இளம் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

எல். முருகன் உரை
எல். முருகன் உரை

கால நிலை, உணவு, சுகாதாரம், வறுமை, கல்வி மற்றும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கின்றனர். இந்தியாவில் இந்த சவால்களை பிரதமர் திறமையாக எதிர்கொண்டு வருகிறார். கரோனா பரவலால் உலகமே பாதிக்கப்பட்டிருந்த சூழலில், இந்தியா தடுப்பூசியைத் தயாரித்து நம் மக்களுக்கு வழங்கியதோடு, உலக நாடுகளுக்கும் வழங்கியுள்ளது.

இதேபோல், கரோனா காலத்தில் இ-வித்யா என்கிற திட்டம் மூலமாக நாடு முழுவதற்கும் இலவச கல்வி வழங்கப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கோவையில் தொடங்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியை மின் சக்தியாக மாற்றுவதில் இந்தியா முன்னோடியாக உள்ளது. தாய் மொழிக் கல்வியை ஆரம்ப கல்வியில் கொடுப்பதே புதிய கல்விக்கொள்கையின் தாரக மந்திரமாக உள்ளது. கோவையில் நடைபெறும் இந்த மாநாடு மூலமாக அனுபவங்கள் பகிர்வு செய்யப்பட்டு, இது உலக அளவில் பிரதிபலிப்பை ஏற்படுத்தும்'' என்றார்.

ஆளுநர் ரவி உரை
ஆளுநர் ரவி உரை

இதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “இந்த கல்லூரி மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு புதிய புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழ் கலாசாரம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. குறிப்பாக, திருவள்ளுவரின் திருக்குறள் என்பது மக்களுக்கு, பல்வேறு கலாசாரங்களைக் கற்றுக் கொடுக்கிறது.

அதேபோல் சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம், புறநானூறு போல இலக்கியங்களும் நமது கலாசாரங்களை எடுத்துக்கூறுகிறது. இயற்கை மனித மோதல் நடந்து வருகிறது. இதனால் தாய் பூமி வெப்பமயமாகி வருகிறது. நதிகள் வறண்டு, வனங்கள் காய்ந்து எனப் பல்வேறு மோதல்கள் மனிதனுக்கும் இயற்கைக்குமான போர் நடந்து வருகிறது.

பல நாடுகள் உலகை அழிக்கும் வகையிலான ஆயுதங்களை தயாரித்து வருகிறது. புதிய எலக்ட்ரானிக் உபகரணங்களால் மனிதர்கள் தற்கொலை, மன அழுத்தம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. குறிப்பாக மன உளைச்சல் அதிகளவில் காணப்படுகிறது. நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் எப்படி அமைதியான ஆரோக்கியமான உலகை உருவாக்க வேண்டும் என்பதை. விஞ்ஞானிகளுக்கும் விவசாயிகளுக்கும் நன்றி, உணவு, மற்றும் புதியவற்றை கண்டுபிடித்தமைக்கு.

கரோனா காலத்தில் தடுப்பூசிக்காக உலக நாடுகள் திண்டாடி வந்த நிலையில், இந்தியா தடுப்பூசிகளை தயாரித்து அதனை உலக நாடுகளுக்கும் இலவசமாக கொடுத்தது. நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் நமது மரபணுவிலேயே உள்ளது. அதுதான் இந்தியா, அதுவே நமது எண்ணம். வாசு தேவ் குடும்பம் என்பது அரசியலுக்காக அல்ல. தமிழில் கூறப்பட்டுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ளது.

இந்தியாவில் இன்னும் சில இடங்களில் வறுமை உள்ளது. உலகில் மக்கள் பசியால் வாடும் நிகழ்வு நடந்து கொண்டுதான் உள்ளது. இந்தியாவை ஒரு குடும்பம் போல பிரதமர் பார்க்கிறார். கொண்டுவரப்படும் திட்டங்கள் ஒவ்வொரு குடிமகனுக்குமானதாக உள்ளது. மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுவதில்லை. இளம் தலைவர்களான நீங்கள் இந்த மாநாட்டில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது நிச்சயம் உலகின் வளர்ச்சிக்கு உதவும்'' என்றார்.

இதையும் படிங்க: டெல்லி மதுபான முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு கேசிஆர் மகள் கவிதா ஆஜர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.