ETV Bharat / state

கோவையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சட்டையை கழட்டி நூதன போராட்டம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 6:59 PM IST

transport-trade-unions-take-off-their-shirts-to-protest-in-coimbatore
கோவையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சட்டையை கழட்டி நூதன போராட்டம்..!

Transport unions strike: கோவை சுங்கம் பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் சிஐடியு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் அரை நிர்வாணத்துடன் அமர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

கோயம்புத்தூர்: ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்றனர். இதில், சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

இதனால், ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜனவரி 08) போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து நிதித்துறைச் செயலர் உடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையிலான இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதையடுத்து "அரசின் பதிலில் திருப்தி ஏற்படாததால் நாளை திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நடைபெறும்" என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதன்படி ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாகக் கோவை சுங்கம் பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் சிஐடியு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிலர் சட்டையைக் கழட்டி அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால், பணிமனை முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஜப்பானை மீண்டும் தாக்கிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.