இந்தி பேசுபவர்கள் பானிபூரி விற்கிறார்கள்- ஆளுநரை வைத்துக்கொண்டே பேசிய பொன்முடி

author img

By

Published : May 13, 2022, 12:39 PM IST

Updated : May 13, 2022, 2:30 PM IST

இந்தி பேசுபவர்கள் பானிபூரி விற்கிறார்கள்- ஆளுநரை வைத்துக்கொண்டே பேசி பொன்முடி

ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற கோவை பாரதியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி திராவிட மாடல், இந்தி எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை குறித்து பேசினார்.

கோயம்புத்தூர்: பாரதியார் பல்கலைகழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் பங்கேற்றனர்.

பட்டமளிப்பு விழாவில் 1,687 முனைவர் பட்ட மாணவர்களுக்கும், பல்கலை கழக அளவில் முதலிடம் பெற்ற 267 மாணவர்களுக்கும் பட்டங்களும் தங்க பதக்கங்களும் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

மேலும் 1,50,424 இளநிலை பட்டங்கள் 1,504 எம்.பில் பட்டங்கள், 48,034 முதுநிலை பட்டங்கள் என மொத்தம் 2,04,362 மாணவர்களுக்கான பட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. முன்னதாக பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , ’இருக்கும் துறையில் அவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக ”நான் முதல்வன்” திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்துகின்றார்.

கோவை பாரதியார் பல்கலைகழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழா
கோவை பாரதியார் பல்கலைகழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழா

பட்டம் பெற்றவர்களில் அதிகபட்சம் பெண்களே இருக்கின்றனர் , ஆளுநர் அடிக்கடி பாரதியார் பாடல்களை சொல்லுவார் என குறிப்பிட்டார். மேலும் கல்வித்துறைக்கு தமிழக முதல்வர் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றார் கல்வி, தொழில் துறை ,தொழிலாளர் நலத்துறை இணைந்து படிக்கும் போதே அனுபவங்களை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

பெண் பட்டதாரிகள் ஆண்களை விட அதிகம் என தெரிவித்த அவர், பெண்கள் படிக்கவே கூடாது என்று சொன்ன காலம் உண்டு, ஆனால் இன்று பெண்களை படிக்க வைக்கின்றார்கள் இதுதான் திராவிட மாடல் ,பெரியார் மண் என பெருமிதம் தெரிவித்தார். நாங்கள் மொழிகளுக்கு எதிரானவர்கள் இல்லை, இந்தி எதிரானவர்கள் அல்ல ,இந்தி திணிப்பு வேண்டாம் என்பதையே கவர்னரின் கவனத்திற்கு சொல்கின்றோம்.

கோவை பாரதியார் பல்கலைகழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி

எந்த மொழியையும் கற்க தயாராக இருக்கிறோம், அது மூன்றாவது மொழியாக மட்டுமே இருக்க வேண்டும். சர்வதேச மொழியான ஆங்கிலமும் , தாய் மொழியான தமிழ் மொழியும் எங்களிடம் இருக்கின்றது என தெரிவித்தார். இந்தி திணிப்பிற்கு அண்ணா சொல்லிய குட்டி கதையை கூறிய பொன்முடி.

இந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பானிபூரி வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர் புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல விசயங்களை பின்பற்ற தயாராக இருக்கின்றோம், தமிழக அரசு மாநில கல்வி கொள்கையினையே பின்பற்றுகின்றோம், மேலும் நாங்கள் எங்கள் உணர்வுகளை கவர்னரின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

இந்தி தேர்வு மொழியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை உயர்த்தப்பட வேண்டும் என்பதற்கு பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்துகின்றது, பட்டம் பெற்ற மாணவர்கள் வேலை தேடுவதை விட, வேலை தருபவர்களாக வருவதுதான் உண்மையான வளர்ச்சி என தெரிவித்தார்.

எங்கள் பிரச்சினைகளையும் ,எங்கள் மாணவர்களின் பிரச்சனையும் உணர்ந்து கவர்னர் செயல் பட வேண்டும் வேண்டுகோள் விடுக்கின்றோம், கல்வி கொள்கையினை ஆய்வு செய்து புதிய பாட திட்டங்களை கொண்டு வரும் போது தமிழக கவர்னர் உதவுவார் என நம்புகின்றோம், பாடம் நடத்தும் ஆசிரியர்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: சொத்து வரி உயர்வு எதனால்? அமைச்சர் நேரு விளக்கம்!

Last Updated :May 13, 2022, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.