ETV Bharat / state

“அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறதா?” - பதிலளிக்காமல் சென்ற எஸ்.பி.வேலுமணி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 8:46 PM IST

கோவையில் எஸ்.பி.வேலுமணி பேச்சு
கோவையில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

SP Velumani speech at coimbatore: அதிமுக தேர்தல்களை சந்திக்க தயாராக உள்ளதாகவும், நிச்சயம் அதிமுக வெற்றி பெறும் என்றும் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கோவையில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோயம்புத்தூர்: கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று (செப்.19) பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கட்சியினரிடையே பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெல்லும். அதிமுக கூட்டணியில் யார் அங்கம் வகித்தாலும், அவர்கள் செல்லும் நோட்டு, டாலர் நோட்டு. கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்கள் கிழிந்த இத்துப்போன செல்லாத நோட்டு" என கூறினார்.

இதனையடுத்து மேடையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "திமுக ஆட்சி போக வேண்டும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். மதுரை மாநாட்டிற்குச் செல்ல உணவு கூட வேண்டாம். வண்டி தயார் செய்து தந்தால் போதும் என தொண்டர்கள் எழுச்சியுடன் வந்தனர். மதுரை மாநாட்டைப் பார்த்து திமுகவினர் பயந்து விட்டனர்.

மதுரை மாநாட்டை பற்றி தெரியாமல், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை படிக்காமல் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் பெரிய தலைவராகி விட்டார். கட்சிக்காக உழைக்காமல் உதயநிதி ஸ்டாலின் பதவிக்கு வந்தார். அண்ணா ஏழைகளுக்காக ஆரம்பித்த கட்சி, குடும்ப சொத்தாக மாறிவிட்டது.

எங்களுக்கு ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். எடப்பாடி பழனிசாமி கருத்தே எங்களது கருத்து. வேலுமணி, தங்கமணி பாஜக பற்றி பேசவில்லை என சிலர் சொல்கிறார்கள். எங்களுக்கு எதிரி திமுகதான். இருந்தாலும் கூட்டணிக்காக நாங்கள் தன்மானத்தை விட்டுத் தர மாட்டோம்" என பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, "அதிமுக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. கோவை மாவட்டம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என நினைக்கின்றனர்.

எல்லா பிரச்னைகள் பற்றியும் அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெளிவாக பேசி விட்டார். எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார். மக்களுக்காக உழைத்த அண்ணா பற்றி உண்மைக்கு புறம்பாக அண்ணாமலை பேசியிருக்கக் கூடாது.

எங்களுக்கு கொள்கைதான் முக்கியம். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் கொள்கைகளை காப்பாற்றுவது எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும். சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்" என கூறினார்.

தொடர்ந்து, "எடப்பாடி பழனிசாமி சொல்வதை மட்டும் தான் நாங்கள் செய்வோம். ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமையும். எடப்பாடி பழனிசாமியின் கருத்தே எங்களது ஒட்டுமொத்த கருத்து" என தெரிவித்தார். மேலும், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்காமல் சென்றார்.

இதையும் படிங்க: சூரியனார் கோயில் ஆதீனத்திற்கு திருவாவடுதுறை ஆதீனம் நோட்டீஸ் - எதற்காக தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.