ETV Bharat / state

வீணாகும் தேங்காய் தண்ணீரில் இருந்து சர்க்கரை நோயாளிக்கு மருந்து.. பொள்ளாச்சி இளைஞருக்கு ஜனாதிபதி விருது.. பின்னணி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 6:08 PM IST

பொள்ளாச்சி இளைஞருக்கு ஜனாதிபதி விருது
வீணாகும் தேங்காய் தண்ணீரில் சர்க்கரை நோய் புண் குணமாக மருந்து கண்டுபிடிப்பு

Diabetes Medicine from coconut water: தேங்காய் தண்ணீரில் இருந்து சர்க்கரை நோயால் ஏற்படும் ஆராத புண்களை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துள்ள பொள்ளாச்சியை சேர்ந்த இளைஞருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து விளக்குகிறது இந்தத் தொகுப்பு..

வீணாகும் தேங்காய் தண்ணீரில் இருந்து சர்க்கரை நோயாளிக்கு மருந்து

கோயம்புத்தூர்: உலகளவில் ஏறக்குறைய 420 மில்லியன் நபர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் உயிர்களை பலிவாங்கும் இந்த நீரிழிவு நோய், உலகளவில் உயிரிழப்புக்கான முன்னணி காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயால் அதிக அளவில் பாதிக்கப்படும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்படும் இந்தியா: தென்கிழக்கு ஆசியாவில் நீரிழிவு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதன் மக்கள் தொகையில் சுமார் 17% நபர்கள் நீரிழிவு நோயாளிகளாக இருக்கின்றனர். இது 2030ஆம் ஆண்டுக்குள் 19% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை 2045ஆம் ஆண்டுக்குள் 134 மில்லியனாக அதிகரிக்கும் என்று சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் ஆய்வறிக்கையின் மதிப்பீடு தெரிவிக்கிறது.

இந்நிலையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் நபருக்கு ஏற்படும் புண்கள் எளிதில் ஆராது. இதனை குணப்படுத்தும் பெரும்பாலான மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இவை அதிக விலையுடன் எளிய மக்களால் வாங்க முடியாத எட்டா கனியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் சர்க்கரை நோய் புண்கள் குணமாக்க உள்நாட்டிலேயே அதுவும் பொள்ளாச்சியிலேயே மருந்து தயாரிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கலாச்சாரத்துடன் இணைந்த தென்னை பயிர்: உலக அளவில் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, மலேசியா உள்ளிட்ட 100 க்கும் அதிகமான நாடுகளில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா, கேரளா, தமிழகம், ஆந்திரா ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக அளவில் தென்னை விவசாயம் இந்தியாவில் அதிகமாக உள்ள நிலையில் தொன்மையான கலாச்சாரத்துடன் இணைந்த பயிராகவும் இது இருந்து வருகிறது.

இந்தியா முழுவதும் 18.95 லட்சம் ஹெக்டேர் அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 16 ஆயிரத்து 940 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 4 லட்சம் ஹெக்டேரில் 12 கோடி தென்னை மரங்கள் உள்ளன. இதில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் 1.5 கோடி தென்னை மரங்கள் உள்ளன.

வீணாகும் தேங்காய் தண்ணீரில் இருந்து நீரிழிவு நோய்க்கான மருந்து: இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உற்பத்தியாகும் தேங்காய்கள் பெரும்பாலும் கொப்பரையாக மாற்றப்படுகிறது. கொப்பரையாக மாற்றப்படும் இடங்களில் உடைக்கப்படும் தேங்காய்களில் உள்ள தேங்காய் தண்ணீர் பயன்பாடின்றி வீணாகிறது. இவ்வாறு கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 20 கோடி லிட்டர் தேங்காய் தண்ணீர் வீணாகிறது.

இப்படி வீணாகும் தேங்காய் தண்ணீரில் இருந்து பொள்ளாச்சியை சேர்ந்த இளைஞர் விவேகானந்தன் என்பவர் சர்க்கரைநோய் புண்களை குணமாக்கும் மருந்தை கண்டறிந்துள்ளார். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்யும் குடும்பத்தை சார்ந்தவர். இவர் கோவையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றின் உதவியுடன் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க: நாய் வளர்ப்பதால் டிமென்ஷியா அபாயம் குறையுமா? - ஆய்வில் வெளிவந்த தகவல்!

தேங்காய் தண்ணீர், தேங்காய் எண்ணை ஆகியவற்றில் உள்ள லாரிக் அமிலம் போன்வற்றை பயன்படுத்தி நீண்ட நாட்களாக ஆராத சர்க்கரை நோய் புண், தீக்காயம் போன்றவை சரியாகும் வகையில் மருந்து தயாரித்து அதனை சோதனை செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.

குறைந்த விலையில் மக்களுக்கு விற்பணை: இந்தியாவில் இந்த ஆராய்ச்சியை யாரும் இதுவரை செய்யவில்லை என்பதால் இந்த கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், ஆராய்ச்சியை மேம்படுத்தவும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. மேலும், இந்த மருந்தை தயாரிக்க பொள்ளாச்சியில் தொழிற்சாலை ஒன்றை துவங்க அனுமதியும் வழங்கி காப்புரிமையையும் வழங்கியுள்ளது.

பொள்ளாச்சியில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் இந்த மருந்து பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இருந்து குறைந்த விலையில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவரது இந்த ஆராய்ச்சியை பாராட்டி ஜனாதிபதி திரௌபதி முர்மு சமீபத்தில் இவருக்கு விருதும் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து விவேகானந்தன் கூறுகையில், "கொங்கு மண்டலத்தில் உற்பத்தியாகும் 4500 கோடி தேங்காய்கள் பெரும்பாலும் கொப்பரைகளாக மாற்றப்படும்போது அதில் இருந்து கிடைக்கும் மருத்துவ குணம் வாய்ந்த தேங்காய் தண்ணீர் வீணாக்கப்படுகிறது.

ஆராய்ச்சியை பாராட்டி விருது வழங்கிய ஜனாதிபதி: மேலும் தேங்காய் எண்ணைய் மருத்துவ குணம் வாய்ந்தது என்பதை நிரூபிக்கவும், அதில் இருந்து கிடைக்கும் லாரிக் அமிலத்தையும், தேங்காய் தண்ணீரையும் மூலப்பொருட்களாக கொண்டு சர்க்கரை நோய், நாட்பட்ட புண்கள் ஆகியவற்றை குணமாக்க மருந்து கண்டறியும் ஆராய்ச்சில் ஈடுபட்டேன். அந்த ஆராய்ச்சியில் எனக்கு வெற்றி கிடைத்தது.

ஆராய்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு மருந்தை அங்கீகரித்துள்ளது. மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை பொள்ளாச்சியில் கட்டப்பட்டு மருந்து தயாரிக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளது. விரைவில் மருந்து ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் குறைந்த விலைக்கு வழங்க உள்ளோம். புண்ணின் மேற்பரப்பில் இதை மருந்துக்கட்டாக பயன்படுத்த வேண்டும்" என அவர் கூறினார்.

மேலும் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து விருது பெற்றதில் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் இவரது இந்த சாதனைக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: மக்கானாவில் இவ்வளவு நன்மைகளா?... என்னனு தெரிஞ்சா அசந்தே போயிடுவீங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.