ETV Bharat / state

கோவை ஜோஸ்ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளையில் திடீர் திருப்பம்! கொள்ளையன் பொள்ளாச்சியில் பதுங்கலா? தனிப்படை அதிரடி வேட்டை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 10:48 PM IST

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடையில் கொள்ளையடித்த கொள்ளையன் பொள்ளாச்சியில் பதுங்கல்
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடையில் கொள்ளையடித்த கொள்ளையன் பொள்ளாச்சியில் பதுங்கல்

கோவை ஜோஸ்ஆலுக்காஸ் தங்க நகை கடையில் 200 பவுன் நகை கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசாருக்கு, கொள்ளையடித்த நபர் பொள்ளாச்சியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து உள்ள நிலையில், தனிப்படை போலீசார் அங்கு விரைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடையில் கொள்ளையடித்த கொள்ளையன் பொள்ளாச்சியில் பதுங்கல்

கோயம்புத்தூர்: கோவை காந்திபுரம் ஜோஸ்ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி அதிகாலை 200 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. தனிப்படை போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கொள்ளையடிக்க வந்த நபர் பொள்ளாச்சி பகுதியில் இருந்து வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பாக நகைக்கடையில் திருடிய நபர் அவரது சட்டையை வைத்து முகத்தை மறைத்துக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் கொள்ளை அடித்து முடித்துவிட்டு வெளியில் வந்த பின், அந்த நபர் சட்டையை துணிக்கடை வாயிலேயே போட்டுவிட்டு, வேறு சட்டை அணிந்து கொண்டு நகைகளுடன் கிளம்பிச் சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்தச் சட்டையில் இருந்த பேருந்து டிக்கெட்டுகளை தனிப்படை போலீசார் கைப்பற்றினர்.

கைப்பற்றிய பேருந்து டிக்கெட்டுகள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரித்த போது, பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரை ஒரு பேருந்திலும், கிணத்துக்கடவிலிருந்து கோவை வரை ஒரு பேருந்திலும் வந்திருப்பது தெரிய வந்தது. மேலும் நகைக்கடையில் கொள்ளை அடித்த பின் காந்திபுரம் நகை கடையில் இருந்து ஆட்டோ மூலம் உக்கடம் பேருந்து நிலையம் சென்ற அந்த நபர், அங்கிருந்து பேருந்து மூலம் பொள்ளாச்சி கிளம்பி சென்றிருப்பதும், உக்கடம் பேருந்து நிலையத்தில் ஏறிய அவர் சிறிது நேரத்திலேயே கரும்புக்கடை பேருந்து நிறுத்தத்தில் அந்த பேருந்தில் இருந்து இறங்கி நடந்துச்சென்று வேறு பேருந்து மூலம் ஏறி சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

பின்னர், கரும்புக்கடை பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து வரும் கொள்ளையனின் சிசிடிவி காட்சிகளையும் தனிப்படை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கோவை காந்திபுரம் உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், அந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் கொள்ளையடிக்கச் சென்ற நபர் பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த நபரை கைதுசெய்ய தனிப்படை ஒன்று பொள்ளாச்சி ஆனைமலைக்கு விரைந்துள்ளது. நகை கடையில் 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த அந்த நபர் தனி நபராக சர்வ சாதாரணமாக ஆட்டோ, பேருந்து, நடந்து மாறி மாறிச் சென்றும் கொள்ளையடித்த நகைகளை கொண்டுச் சென்றுள்ளார். தற்போது கொள்ளையன் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அந்த நபரிடமிருந்து களவாடப்பட்டுள்ள நகைகளை பறிமுதல் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளை.. புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.