ETV Bharat / state

தடாகம் அருகே அடிக்கடி ரேஷன் கடையை சேதம் செய்யும் யானை.. இதுவரை இழப்பீடு தரவில்லை என ரேஷன் ஊழியர் வேதனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 1:53 PM IST

Updated : Dec 5, 2023, 2:30 PM IST

Elephant damaged Ration Shop: தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையை அதிகாலையில் வந்த காட்டு யானைகள் சேதப்படுத்திச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Elephant damaged Ration Shop
தடாகம் அருகே அடிக்கடி ரேஷன் கடையை சேதம் செய்யும் யானை

தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையை அதிகாலையில் வந்த காட்டு யானைகள் சேதப்படுத்திச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு

கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் உள்ள தடாகம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவு காணப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், தடாகம் மாங்கரை பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில நேரங்களில் ஊருக்குள் புகும் காட்டு யானைகள் ரேஷன் கடைகளை சேதப்படுத்தி, அரிசி உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டும் செல்கிறது. இந்நிலையில், இன்று தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் அதிகாலை சுமார் 3 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள், நஞ்சுண்டாபுரம் நியாய விலைக் கடையை சேதப்படுத்தி, அங்கிருந்த அரிசி, சர்க்கரை ஆகியவற்றை உண்டுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் நாள்தோறும் காட்டு யானைகள் வருவதாகவும், அவ்வாறு வரும் காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்தனர். என்னதான் வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினாலும், மீண்டும் வெளியேறி விடுவதாகவும் தெரிவித்தனர். இந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 3 முறை இந்த ரேஷன் கடையை யானைகள் சேதப்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இது குறித்து பேசிய ரேஷன் கடை பணியாளர் அமுதா, “இப்பகுதியில் யானை அடிக்கடி வருகிறது. இரவு வந்த யானை கூட்டம், 25 கிலோ சர்க்கரை மற்றும் 20 கிலோ அரிசி வரை சேதப்படுத்திச் சென்றுள்ளது. சுமார் 4 மாதங்களுக்கு முன்பு வந்த யானை, ரேஷன் கடை ஜன்னல்களையும் சேதப்படுத்தி, அரிசியையும் சேதப்படுத்தி சென்றுவிட்டது.

வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை எந்த இழப்பீடுத் தொகையும் வரவில்லை. கிட்டத்தட்ட கடந்த 3 வருடங்களாக மனு அளித்து வருகின்றோம். வனத்துறை கடிதம் தருவார்கள், அதனை அரசாங்கத்திடம் தொடர்ந்து அளித்து வருகின்றோம், ஆனால் தற்போது வரை எந்த ஒரு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: படிப்படியாக குறையும் மிக்ஜாங் புயல் தாக்கம்.. சென்னையின் தற்போதைய நிலவரம் என்ன?

Last Updated : Dec 5, 2023, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.