ETV Bharat / state

ரகசியங்களை அவுத்து விட்டால், எடப்பாடி திகார் சிறைக்கு தான் செல்ல வேண்டும் - ஷாக் கொடுத்த ஓபிஎஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 7:05 PM IST

ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்

O.Panneerselvam Byte: எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடம், ஆரியம் என்றால் என்ன என்பது தெரியாது. திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாது. ஆக்சிடென்டில் பொதுச் செயலாளர் ஆனார். சீக்கிரம் அவுட் ஆகி விடுவார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: சூலூர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்த இயக்கத்தினை அழிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்தன. ஆனால் இந்த இயக்கத்தை வலுவானதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றினார். மற்ற மாநிலங்கள் பார்த்து வியக்கும் ஆட்சியை ஜெயலலிதா கொடுத்தார்.

ஆட்சி போயிருக்கும்: அவர் மறைவிற்குப் பின்னர் அவர்கள் கட்டி காப்பாற்றிய சட்டவிதிகள், அதிமுக தலைமை பொறுப்பிற்கு யார் வர வேண்டும் என்ற விதிகளைத் தூக்கிப் போட்டு விட்டனர். அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால், மன்றாடி கேட்டுக் கொண்டதால் கழகத்தை அப்போது மீண்டும் இணைத்தோம். நிரந்தர பொதுச்செயலாளர் என்ற உச்சபட்ச நிலையை ஏற்படுத்தினோம்.

கழகத்தின் பொருளாளராக 12 ஆண்டுகள் இருந்த என்னை வன்முறையாக வெளியேற்றி விட்டனர். சசிகலா உங்களுக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுத்தார்கள். அவர்களை நீங்கள் என்ன வார்த்தையில் பேசினீர்கள். 11 எம்.எல்.ஏ ஆதரவுடன் இருந்த நான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்து இருந்தால் ஆட்சி போயிருக்கும்.

வழக்கு இன்னும் நிலுவையில்: நான் ஆதரவு கொடுத்ததால் ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப்பட்டது. தவறான வழியில் சென்ற போது எச்சரித்தேன். ஆனால் அதிகார போதை, பணத்திமிரில் இருந்ததால் எடப்பாடிக்கு ஆட்சி போனது, அடுத்தடுத்த தேர்தல்களிலும் தோற்றுப் போனது. ஈரோடு இடைத்தேர்தலில் தனியாக நின்றால் ஓட்டுக்கள் பிரியும். வாபஸ் வாங்கிடுங்கள் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கேட்டார். அதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாபஸ் வாங்கிக் கொண்டேன்.

ஆனால் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக ஈரோட்டில் தோற்றுப் போனது. இந்த தேர்தல்களில் தோற்றுப் போனதால் மக்கள் உங்களை ஏற்கவில்லை என்று தானே அர்த்தம். எடப்பாடி பழனிசாமி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய அமைச்சராக வர இருந்ததைத் தடுத்தவர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கின்றது. தொண்டர்களுக்காக வாதாடிக் கொண்டு இருக்கின்றோம். இந்த பக்கம் தொண்டர்கள் இங்கு இருக்கின்றனர்.

திகார் சிறைக்குத் தான் செல்ல வேண்டும்: அங்குக் குண்டர்கள்தான் இருக்கின்றனர். தொண்டர்களுக்குக் கொடுத்துள்ள உரிமையைத் தந்தால் தான் தலைவர்களுக்கு நன்றி செலுத்துவது போன்றது. தனிக்கட்சி துவங்கும் நோக்கமில்லை. கோரப்பிடியிலிருந்து அதிமுகவைக் கைப்பற்றி மீண்டும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மாவிடம் ஒப்படைத்தால்தான் நன்றியாக இருக்கும். அதிமுக துவங்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவேன். தனிக்கட்சியை எப்போதும் துவங்க மாட்டேன் என்பது நிலைப்பாடாக இருக்கின்றது.

தனிக்கட்சி ஆரம்பித்தால் உச்ச நீதிமன்ற வழக்கில் இடையூறு ஏற்படும். முதலமைச்சர் பதவி மூன்று முறை கொடுத்தார்கள். நான் திருப்பி கொடுத்து விட்டேன். என்னை யாரும் துரோகி என்று சொல்ல முடியாது. நாங்கள் செய்த குற்றம் என்ன? இன்னமும் கட்சி தொண்டர்களின் உரிமைக்காகப் பாடுபட்டு வருகின்றேன்.

ஆட்சியிலிருந்த போது கோப்புகள் என்னிடம் வந்துதான் செல்லும். அந்த ரகசியங்களை நான் அவுத்து விட்டால், எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்குத் தான் செல்ல வேண்டும். அமைப்பை வலுப்படுத்த வேண்டும். இதை 100 சதவீதம் செய்தால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்” என்று கூறினார்.

அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கின்றேன்: பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “ஜனவரி 19 ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வருகின்றது. அந்த வழக்கில் பொதுக்குழு தீர்மானம் தொடர்பான முடிவு கிடைக்கும். ஈரோட்டில் இரட்டை இலை தற்காலிகமாகத் தான் கொடுக்கப்பட்டது. என் மீது என்ன குற்றம் சொல்கின்றனர்?, என்னை நீக்குவதற்கு என்ன காரணம் சொல்கின்றனர்?, யாருக்கு நான் நம்பிக்கை துரோகம் செய்தேன் என்பதைச் சொல்ல முடியுமா?, இப்பொழுதும் அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கின்றேன்.

சபாநாயகரின் தனி அதிகாரம்: ஒன்றுபட்டால்தான் வெற்றி அடைய முடியும். புரிய வேண்டியவர்களுக்கு இது புரியவேண்டும். இதைக் காதில் வாங்க மாட்டேன் என்கின்றனர். மக்களின் அபிமானம், தொண்டர்களின் அபிமானத்தைப் பெற வேண்டும் என சொல்கிறேன். அதைக் கேட்க மாட்டேன் என்கின்றனர். நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு செயல்படுவதாகச் சொல்பவன் முட்டாள். அதிமுக நிர்வாகிகள் மீது எத்தனை வழக்கு இருக்கின்றது. கோடநாடு கொலை கொள்ளை உட்படப் பல வழக்குகள் இருக்கின்றன.

அதில் எந்த நடவடிக்கையும் இல்லை. திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்படுகின்றன என்பது பொதுமக்கள் கருத்து. சட்டமன்ற விதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற விதி மட்டும் தான் இருக்கிறது. துணைத்தலைவர் என்பது இல்லை. சபாநாயகர் நினைத்தால் கொடுக்கலாம். அவர் வேண்டாம் என்று நினைத்தால் கொடுக்க தேவையில்லை. அது சபாநாயகரின் தனி அதிகாரம். அது சட்டமன்ற விதிகளில் இல்லை.

ஜானகி அம்மாவின் சொத்து: நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடைய நிலைப்பாடு கடந்த பத்தாண்டுகளில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்திருக்கிறார்கள். எனவே மீண்டும் பிரதமராக மோடி தான் வர வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். அதிமுக ஆட்சியின் போது சில தவறுகள் உள்ளே நடந்திருக்கிறது. இப்போது ஆட்சியில் யார் இருக்கின்றனர். 100 நாட்களில் கோடநாடு குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்னார்கள்.

அதில் ஆறு கொலைகள் நடந்துள்ளது. சில அரசியல் ரகசியங்கள் உண்மையில் இருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியுமா? நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனப் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், அதை நீக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது?, அந்த சேரில் போய் உட்காரலாமா?, சசிகலாவிற்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்கும் பொழுது தீர்மானம் எதுவும் போடவில்லை. திமுக ஆட்சி குறித்து தினந்தோறும் அறிக்கைகள் கொடுத்து வருகிறேன்.

புயல், வெள்ளம் வந்தால் அதில் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவதில்லை. தோற்றுப் போய் இருக்கின்றனர் என்று சொல்லி இருக்கின்றேன். எந்த காலத்திலும் அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமி மேலே வரவே முடியாது” என தெரிவித்தார். எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாளுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிமுக தலைமை கழகம் ஜானகி அம்மாவின் சொத்து.

நாடகமாடுகிறார்: தலைமைக் கழகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என்று பெயர் வைக்க வேண்டும். கீழே இருக்கும் அரங்கத்திற்கு ஜெயலலிதா பெயரும், மேலே இருக்கும் அரங்கத்திற்கு ஜானகி அம்மாள் பெயரும் வைக்க வேண்டும் என ஜே.சி.டி பிரபாகரன் சொன்ன பொழுது எடப்பாடி பழனிசாமி வைக்கவில்லை. முகத்தைச் சுளித்தார். எம்ஜிஆர் பெயரை மட்டும் வைத்துவிட்டு ஜெயலலிதா, ஜானகி ஆகியோர் பெயரை வைக்காமல் ஏமாற்றிவிட்டு எடப்பாடி இப்பொழுது நாடகமாடுகிறார்.

சீக்கிரம் அவுட் ஆகி விடுவார்: எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடம், ஆரியம் என்றால் என்ன என்பது தெரியாது. திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாது. ஆக்சிடென்டில் பொதுச் செயலாளர் ஆனார். சீக்கிரம் அவுட் ஆகி விடுவார். நூற்றாண்டு விழா தொடக்கத்தில் ஜானகியம்மாள் மற்றும் எம்.ஜி.ஆர் இருக்கிற ஒரு சிலையை நிறுவுவதற்கு உரிய ஒப்புதலை அறக்கட்டளை தர வேண்டும் எனக் கேட்டோம். சிலை தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்த நூற்றாண்டு விழாவை ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர் இருக்கும் சிலை வைக்கப்படும். எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கும் அளவிற்கு நாங்கள் தயாராக இல்லை. ஏற்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். பாரதிய ஜனதா கட்சியுடன் உறவு சீராக இருக்கிறது என கூறினார்.

இதையும் படிங்க: அடைப்பிரதமன் பாயாசம் முதல் பீடா வரை.. கமகமத்த அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.