கோயம்புத்தூர் மாநகரில் சிங்காநல்லூர், குனியமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியுடன் இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து காவல் துறையினர் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தினர்.
மேலும், வாகன சோதனையில் இரவு நேரத்தில் உலா வந்த அடையாளம் தெரியாத கும்பலைச் சேர்ந்த ஒருவரை பிடித்து அவர் மூலம் மற்ற நபர்களை கைது செய்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோவை அரசூர், கனியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வரும் 7 பேர் கொண்ட கும்பல், பூட்டிய வீட்டின் கதவுகளை உடைத்து திருட முயன்று வருகின்றனர்.
குறிப்பாக, சங்கோதிபாளையம், செல்லப்பம்பாளையம் ஆகியப் பகுதியில் பூட்டிய வீட்டின் மேற்கூரையில் ஏறி ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்க முயன்றுள்ளனர். இதேபோல, மற்றொரு வீட்டின் கதவை உடைக்க முயலும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் காவல் துறையினர் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். நள்ளிரவு நேரங்களில் உலா வரும் கும்பலை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். பொதுமக்களும் இரவு நேரங்களில் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.100 கோடி மோசடி.. சாமியார் வேடத்திலிருந்த ஆசாமி கைது!