ETV Bharat / state

"மோடிக்கு எங்கு போனாலும் என் ஞாபகம் தான்" - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 9:50 AM IST

udhayanidhi Stalin speech
திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

udhayanidhi Stalin speech: தமிழகத்தில் எப்போதும் பாஜக நுழைய முடியாது என்பதற்கான முன்னோட்டமாக திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கோயம்புத்தூர்: திமுக இளைஞர் அணி மாநாடு சேலத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (டிச.2) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் முத்துசாமி மற்றும் எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 'கோவையில் தான் முதல் திராவிட இயக்க தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இங்கு கருணாநிதி கால்படாத இடமே இல்லை. தமிழகத்தின் முதல் வேளாண்மை பல்கலைகழகம், டைடல் பார்க், சிறுவாணி கூட்டு குடிநீர் திட்டம், பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார்.

கோவையில் நடக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டம் மினி மாநாடு போல உள்ளது. சேலம் மாநாட்டு நிதியாக கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக ரூ.3.37 கோடி வழங்கியுள்ளனர். தமிழகத்திலேயே அதிக மாநாட்டு நிதியை கோவை மாவட்டம் வழங்கியுள்ளது. மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 'மூன்று மாதத்திற்கு முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடந்தது, எதற்கு நடந்ததுனு யாருக்கும் தெரியாது. இயக்க வரலாறு, கொள்கை, தலைவர்கள் பற்றி பேசினார்களா? கேலிக்கூத்தான மாநாட்டை நடத்தினார்கள். ஆனால், திமுக இளைஞர் அணி சேலம் மாநாடு இந்தியாவிலேயே எப்படி ஒரு மாநாடு நடத்த வேண்டும் என்பதை போல நடத்தி காட்ட வேண்டும்.

கடந்த 3 வருடங்களில் தலைவர் கொண்டு வந்த முக்கியமான நான்கு திட்டம் முதலில் கட்டணமில்ல பேருந்து, பெண் கல்வி மேம்பட புதுமைப்பெண் திட்டம், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் 31 ஆயிரம் பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். மேலும், 1.18 கோடி மகளிர் உரிமைத்திட்டம் இதனை மக்கள் மத்தியில் இளைஞர்கள் கொண்டு செல்ல வேண்டும்.

தமிழகத்தில் ஜெயலலிதா இருந்தவரை நீட் (NEET Exam) வரவில்லை, அடிமை அதிமுகவினர் பாஜக வற்புறுத்தல் காரணமாக நீட்டை தமிழகத்தில் நுழைய விட்டனர். நீட் தேர்வு தடை செய்ய, நீக்கக் கோரி இதுவரை 60 லட்சம் பேர் கையெழுத்துப் பெற்றுள்ளோம். தற்போது வரை தமிழகத்தில் இருந்து 9 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி வரியாக ஒன்றிய அரசு பெற்றுள்ளது.

மோடிக்கு எப்போது எனது நினைப்பு தான்: ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கொடுத்தது வெறும் 2 லட்சம் கோடி தான். ஆனால், உத்திரபிரதேசம் மாநிலத்திற்கு 9 லட்சம் கோடியை கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி கடந்த வாரம் மத்திய பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தில் என்னைப் பற்றி பேசியுள்ளார். அவருக்கு எப்போதும் என்னுடைய நினைப்பு தான். பிறப்பால் அனைவரும் சமம் என்று தான் பேசினேன். ஆனால், இனப்படுகொலை தூண்டினேன் என பிரச்சாரம் செய்கின்றனர்.

சிஏஜி அறிக்கை: மேலும் திமுக ஆட்சியில் கருணாநிதி குடும்பம் தான் வாழ்கிறது என்கிறார். ஆமாம் தமிழகத்தில் நாங்கள் அனைவரும் கருணாநிதி குடும்பம் தான், நான் மட்டும் அல்ல. அனைவரும் கருணாநிதி பேரன்கள், வாரிசுகள் தான். சிஏஜி அறிக்கை என்ன சொல்கிறது? 9 ஆண்டுகள் பாஜக அரசிடம் ரூ.7.5 லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை. 1 கிலோ மீட்டர் சாலைக்கு ரூ.250 கோடி செலவு கணக்கு.

ரமணா பட பாணியில் இறந்த போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவக்காப்பீடு கொடுத்துள்ளது பாஜக அரசு. ஊழல் ஆட்சியை பாஜக அரசு நடத்தி வருகிறது, தமிழகத்தில் எப்போதும் பாஜக நுழைய முடியாது என்பதற்கான முன்னோட்டமாக திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளதாக” தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவிகளுடன் சினிமா பாடலுக்கு நடனமாடிய அமைச்சர் பொன்முடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.