ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும் ஆட்சி நடக்கிறது - அமைச்சர் சேகர்பாபு

author img

By

Published : Jan 21, 2023, 9:20 AM IST

தமிழ்நாட்டில் ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும் ஆட்சி நடக்கிறது - அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும் ஆட்சி நடக்கிறது - அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாட்டில் ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும் ஆட்சி நடக்கிறது எனவும், இந்து சமய அறநிலையத்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தாராளமாக நிதி வழங்குகிறார் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கோவை பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “வருகிற ஜனவரி 27ஆம் தேதி பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்த கும்பாபிஷேக விழாவுக்கு வரும் மக்களின் அடிப்படைத் தேவைகள், வாகன நிறுத்தும் இடம் மற்றும் கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் வழிபடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் வெகு விரைவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.

1,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட புராதான கோயில்களைப் பாதுகாக்கும் வகையில், 2022 - 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவை பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 104 திருக்கோயில்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேநேரம் அடுத்த சட்டமன்ற கூட்டத்தில் பல புராதான கோயில்களை திருப்பணிக்கு எடுத்துக் கொள்ள கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு நிதியை எதிர்பார்க்கிறோம். ஆன்மீகவாதிகள் சிறப்பாக இருக்கும் ஆட்சியில், நிதி தரப்படும் என எதிர்பார்க்கிறோம். புராதான கோயில்களை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாக்கப்படும்.

மருதமலை கோயிலுக்கான ரோப் கார் திட்டத்திற்கு கடந்த 5ஆம் தேதி ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட உடன், உடனடியாக அதற்கான பணிகள் தொடங்கும். மருதமலை உள்ளிட்ட மலைக் கோயில்களுக்கு அருகே குப்பை கொட்டப்பட்டால், உடனுக்குடன் அகற்றும் பணியை இந்து சமய அறநிலையத் துறை எடுக்கும்.

பக்தர்களின் உபாதைகளை களைய அனைத்து நடவடிக்கையும் இந்து சமய அறநிலையத் துறை எடுக்கும். கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என தெரிவித்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் பாலியல் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “யார் தவறு செய்தாலும் எங்களின் கவனத்திற்கு வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக துறை சார்ந்து அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, புகார் உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பேரூர் தர்பனம் மடம் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்டது. அரசு சார்பில் சிவராத்திரி விழா கடந்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், அதற்கு பெரு வாரியாக வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து இந்த ஆண்டு ஒரு கோயில் என்பது 5 கோயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருநெல்வேலி, தஞ்சை, கோவை என 5 திருக்கோயில்களில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. அதற்காக பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து, சிவராத்திரி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

பழுத்த மரத்தில்தான் கல் அடிபடும் என்பது போல், திமுக அரசு மீது பழி போடப்படுகிறது. எந்த ஆட்சியிலும் செய்யாத சாதனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். 407 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1,500 கோயில்களில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.

14,500 திருக்கோயில் ஒளி வீச முதலமைச்சர் ஸ்டாலின்தான் காரணம். இதனை ஏற்றுக் கொள்ள மனப்பக்குவம் இல்லாதவர்கள், அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். கோயில்களை பாதுகாக்க வரும் தடைக் கற்களை, படிக் கற்களாக இந்த ஆட்சி மாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும் ஆட்சி நடக்கிறது.

அரசின் நிதியை இந்து சமய அறநிலையத் துறைக்கு தாராளமாக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார். இந்த ஆட்சியில் நடப்பதுபோல், எந்த ஆட்சியிலும் எந்த காலத்திலும் திருப்பணிகள் நடக்கவில்லை. இதனை விஞ்சும் பணிகளை முதலமைச்சரால் மட்டுமேதான் செய்ய முடியும்” என்றார்.

இதையும் படிங்க: ரூ.9 ஆயிரம் மோசடி வழக்கில் 28 ஆண்டுக்கு பிறகு பரபரப்பு தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.