ETV Bharat / state

கோவை கார் விபத்து - திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயலா?

author img

By

Published : Oct 23, 2022, 4:02 PM IST

கோவை கார் விபத்து- திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயலா?
கோவை கார் விபத்து- திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயலா?

கோவையில் கார் வெடித்த இடத்தில் ஆணிகளும், கோலிக்குண்டுகளும் கிலோ கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயலா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை அருகே உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று(அக்.23) அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இதனையடுத்து காவல் துறை உயர் அலுவலர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தமிழ்நாடு காவல்துறைத்தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காரில் இரண்டு சிலிண்டர் இருந்ததாகவும்; அதில் ஒன்று வெடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் விசாரணை முடிவிலேயே இதற்கான காரணம் தெரியவரும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் கார் வெடித்த இடத்தில் ஆணிகளும், கோலி குண்டுகளும் கிலோ கணக்கில் சிதறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதனை சேகரித்த தடய அறிவியல் போலீசார் கார் வெடித்ததற்கான காரணங்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து 6 குழுக்கள் கொண்ட தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கமாக சதிச்செயல்களின்போது சேதங்கள் அதிகமாக இருக்க ஆணிகளும், இரும்பு துகள்களும் பயன்படுத்தப்படும் நிலையில், தற்போது விபத்து நடந்த இடத்தில் கோலிக்குண்டுகளும், ஆணிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்தச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:கோவை கார் விபத்து குறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் - டிஜிபி சைலேந்திரபாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.