தடைசெய்யப்பட்ட அமைப்புகள் தொழில் நகரான கோவையில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத் துறை சில நாட்களுக்கு முன் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதையடுத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், செல்ஃபோன் ஆப்பரேட்டர் கொடுத்த தகவலின்பேரில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தங்க நகைப் பட்டறையில் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த பாரூக் கௌசீரை கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பாரூக் தனது செல்ஃபோனை சர்வீஸ் செய்ய கடையில் கொடுத்திருந்ததும், அந்த செல்ஃபோனில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முஜாஹிதீன் வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து இவர் செயல்பட்டுவந்ததும் தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப்பில் அவர் துப்பாக்கி குறித்த தகவல்களை பரிமாறிக்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி வங்கதேசத்தைச் சேர்ந்த இவர் கோவையில் ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கித் தொடர்பாக வாட்ஸ்அப்பில் யாருடன் பேசிவந்தார் என்பது குறித்தும் இவருக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்தும் கோவை மாநகர காவல் துறையினர் அவரிடம் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், கோவையில் தங்கியுள்ள வங்கதேசத்தைச் சேர்ந்த நபர்களின் பட்டியலை தங்கநகை பட்டறை உரிமையாளர்களிடம் சேகரித்துவருகின்றனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கோவை சுக்ரவார்பேட்டையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவானிசிங் என்பவரது அறையிலிருந்து இரு நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றபட்டதையடுத்து கோவை தனிப்படை காவல் துறையிர் ராஜஸ்தானில் முகாமிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.