கோயம்புத்தூர்: மாவட்டம் சுந்தராபுரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் நாகர்ஜுனன். இவரது, மனைவி ஷர்மிளா. முன்னதாக, இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்குப் பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து காந்திநகரில் வசித்து வந்த தம்பதி இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது. இதனிடையே, மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் நாகர்ஜுனன் ஞாயிறு மதியம் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதன் பின்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், நண்பர்களுடன் மது போதையில் இருந்த போது மனைவியைக் கொன்று விட்டதாக நண்பர்களிடம் நாகர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
இதை உறுதி செய்த நண்பர்கள் போத்தனூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் காவல்துறையினர் ஷர்மிளாவின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நாகர்ஜுனனை கைது செய்த போலீசார், கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தம்பி மனைவி,குழந்தையை கொலை செய்து தீ வைத்து எரித்த கொடூரம்