கோயம்புத்தூர்: கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
பின்னர் மாணவர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கின்றேன்..!. பட்டம் பெற்றவர்கள் புதிய வாழ்க்கையில் நுழையப் போகின்றீர்கள்.
நமது நாடு புதிய நம்பிக்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. நம்நாடு பல்வேறு இனம், மொழி, கலாசாரம் கொண்டது. கடந்த 7 ஆண்டுகளில் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ’ஆயஷ்மான் பாரத்’ திட்டத்தின்கீழ், மக்களின் உடல்நிலையில் இந்த அரசு கவனம் செலுத்துகின்றது” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “மத்திய அரசு ஒரு மொழியை (இந்தி) திணிக்க முயல்வதாக சொல்லப்படுகின்றது. ஆனால், அப்படி இல்லை. புதிய கல்விக்கொள்கை தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகிறது. மாநில மொழிகளிலேயே பாடங்கள் நடத்தப்படுகின்றது. தமிழ் சிறப்பான உயர்ந்த மொழி.
அந்தந்த மாநில மொழிகளில் நீதிமன்ற வழக்காடுதல் நடைபெற வேண்டும் என பிரதமர் மோடி சமீபத்தில் நடந்த நீதிபதிகள் கூட்டத்தில் பேசி இருக்கின்றார். பிறநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைத்து இருப்பதைப் போல , இந்தியாவில் உள்ள பிற பல்கலைக்கழகங்களிலும் இருக்கை அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும், சுப்பிரமணிய பாரதி பெயரில் பனராஸ் பல்கலையில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளதையும் நினைவு கூர்ந்தார்.
இந்தி மொழி திணிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறிய ஆளுநர், எல்லா மொழிகளும் வளர ஊக்கவிக்கப்படும் எனத் தெரிவித்தார். புதிய கல்விகொள்கையால் தமிழ்மொழி பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக கற்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.35.82 கோடி மதிப்புள்ள அரசு கட்டுமானப்பணிகளைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்