தமிழ்நாட்டில் புகையிலை, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை தயாரிக்கவும் விநியோகிக்கவும், விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2013ஆம் ஆண்டு இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டார். ஆனாலும், தடையை மீறி பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவ்வப்போது அரசு அலுவலர்கள் நடத்தும் சோதனையில் போதை பொருட்கள் பிடிபட்டாலும், சட்டவிரோதப்போக்குகளும் ஒருபக்கம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதனடிப்படையில் கோயம்புத்தூரில் நேற்று (டிச.16) மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், சூலூர் பகுதியில் 50 கிலோ புகையிலை பொருட்களும், சிங்காநல்லூர் பகுதியில் 20 கிலோ புகையிலை பொருட்களும், கவுண்டம்பாளையம் பகுதியில் 30 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ஒரு லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடக்கப் பள்ளியை திணறவைத்த காட்டு யானைகள்