ETV Bharat / state

கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் - நடந்தது என்ன?

author img

By

Published : Aug 16, 2023, 5:10 PM IST

போக்குவரத்து துறையில் புதிதாக பணிக்கு வருபவர்கள் வேலைக்கு வரும்போது என்ன ஆர்வத்தில் வந்தீர்களோ, அதே ஆர்வத்தில் கடைசி வரை பணிபுரிய வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோவை மாவட்டம் சார்பில், சுங்கம் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் பணிக் காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி வழங்குதல், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு நிகழ்ச்சி, கோவை மாவட்ட பணிமனை அளவில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு 27 பேருக்கு வாரிசு பணி ஆணை, மருதமலை, சுங்கம் 1, சுங்கம் 2 ஆகிய மூன்று கிளைகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வறை, 50க்கும் மேற்பட்ட பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் சிவசங்கர், கோவையில் மட்டும் போக்குவரத்துத் துறையில் பாதிக்கப்பட்ட 550 பணியாளர்களின் குடும்பங்களுக்கு 145 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆட்சி காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆட்சிக்காலத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை முடிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து மிகச் சிறப்பான ஒரு திட்டம் எனவும், தற்போது இந்த திட்டத்திற்கு ‘விடியல் பயணம்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறிய அவர், இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவிலேயே மிகப்பெரிய துறையாக போக்குவரத்து துறை உள்ளது என கூறிய அவர், அனைத்து போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கும் பணியாளர்களை எடுக்க உள்ளதாகவும், அதற்கான அரசாணையை முதல்வர் அண்மையில் வெளியிட்டிருந்தார் எனவும் தெரிவித்தார்.

புதிய பணியாளர்களை பணிக்கு எடுக்கும்போது போக்குவரத்து துறை மீண்டும் மறுமலர்ச்சி காண உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், புதிதாக பணிக்கு வருபவர்கள் வேலைக்கு வரும்போது என்ன ஆர்வத்தில் வந்தீர்களோ, அதே ஆர்வத்தில் பணிபுரிய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு சமச்சீரான வளர்ச்சியை பெற்றுள்ளது என கூறிய அவர், போக்குவரத்து துறையினால்தான் அனைவரும் நகரத்திற்கு சென்று படிப்பை பெற்றுள்ளார்கள்” என தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், “பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் என்பது ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற பெயரில் சிறப்பாக நடைபெறுகிறது. 40 சதவீதமாக இருந்த பெண்கள் பயணம், 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாள்தோறும் 48 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பேருந்து திட்டம் மூலம் பயணம் செய்கின்றனர். இத்திட்டத்திற்கு முதலமைச்சர் வழங்கிய நிதி, போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படவும் பயன்படுகிறது.

தொழிலாளர்கள் பற்றாக்குறையை நீக்க புதிய பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆட்சி பொறுப்பு ஏற்றபோது எவ்வளவு மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் ஓடியதோ, அதே எண்ணிக்கையில் தொடரும். கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது. புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படும்போது, நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும்.

மின்சாரப் பேருந்துகள் சென்னையைத் தொடர்ந்து பரிசத்ய முறையில் மற்ற மாவட்டங்களிலும் இயக்கப்படும்.
மஞ்சள் நிற அரசுப் பேருந்துகளால் ஒரு சிக்கலும் இல்லை. அந்த மஞ்சள் நிறம் வேறு. இந்த மஞ்சள் நிறம் வேறு. நீல வண்ண பட்டையும் இருக்கும். புதிய பேருந்துகள் முகப்பே வித்தியாசமாக இருக்கும். தூரத்தில் இருந்து பார்த்தாலே அரசுப் பேருந்து என்பது தெரியும். இதனால் குழப்பம் வராது.

1,400 பேருந்துகள் புனரமைக்கப்பட உள்ளது. பயணச்சீட்டு ஆன்லைன் முறை வரும்போது சில்லறை பிரச்னை இருக்காது. கட்டணமில்லா மகளிர் திட்டத்தில் பயணிக்கும் மகளிரை நடத்துநர்கள் இழிவுபடுத்தியது கடந்த காலங்களில் நடந்தது. பொத்தாம் பொதுவாக தற்போதும் நடப்பதாக சொல்லக்கூடாது” என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேடைக்கு ஆறு மாத குழந்தையுடன் வந்த அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன் என்பவர், கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து பணியிட மாறுதல் தொடர்பாக கோரிக்கை விடுத்தார். இது குறித்து கண்ணன் கூறுகையில், தனது சொந்த ஊர் தேனி என்றும், தனக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தார்.

எனவே, எனது இரண்டு பெண் குழந்தைகளையும் தனது தாய் தந்தையார்தான் பார்த்துக் கொள்வதாகவும், தனது பெற்றோர்களுக்கும் வயது காரணமாக குழந்தைகளைப் பார்த்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதால் சொந்த ஊரிலிருந்து கோவைக்கு அழைத்து வர இயலாத சூழல் உள்ளது. எனவே, தனக்கு சொந்த ஊருக்கே பணி மாறுதல் வேண்டியும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

இது குறித்து பலமுறை பொது மேலாளரிடம் பணி மாறுதல் தொடர்பாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் அமைச்சரை நேரில் பார்த்து குழந்தையுடன் கோரிக்கை வைத்ததாக கூறினார். மேலும் அமைச்சர், தனது பிரச்னை குறித்து பேசி தீர்வு காணப்படும் என தெரிவித்ததாகவும் கண்ணன் கூறினார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்த குமார் உள்பட போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்குவரத்து பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களை கொடியேற்ற வைத்து சுதந்திர தினம் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.