ETV Bharat / state

ஆபாச படம் பார்த்ததாக இளைஞர்களிடம் பல லட்சம் மோசடி! கும்பல் சிக்கியது எப்படி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 5:18 PM IST

cyber crime
cyber crime

Gang arrested for extorting money: ஆபாச படம் பார்த்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் போல் பேசி இளைஞர்களிடம் பணம் வசூலித்து வந்த 9 பேர் கொண்ட கும்பலை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்: கோவையை சேர்ந்த சபரி என்ற இளைஞர் சக நண்பர்களுடன் சேர்ந்து சில இளைஞர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் ஆபாச படங்கள் பார்த்துள்ளீர்கள் உங்கள் மீது நடமாடும் நீதிமன்றம் மூலம் வழக்கு புனையப்பட உள்ளது, இதில் இருந்து தப்பிக்க பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செல்போனில் பேசி கொண்டிருக்கும் போது, காவல் துறையினர் பயன்படுத்தும் வாக்கி டாக்கி ஒலி உள்ளிட்டவைகளை எழுப்பி அனைவரையும் பீதிக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது. இதனை உண்மை என நம்பிய இளைஞர்கள் சபரி கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

இந்த முறையை பயன்படுத்தி கொண்டு சபரி மற்றும் அவரது சக நண்பர்கள் பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணத்தை கொடுத்து பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் சபரியின் குழு மீது சந்தேகமடைந்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை விசாரித்த சைபர் கிரைம் போலிசார் இதனை செய்த சபரி(22), ஜப்பான் (எ) ஆலன்(19), கிச்சா (எ) கிஷோர்(20), சின்னபகவதி (எ) பிரிவின் மோசஸ்(20), வெய்ட்டி (எ) அபிஷேக் குமார்(20), வடக்கு (எ) தனுஷ் குமார்(20), தோனி (எ) பிரவீன் குமார்(20), அப்பு (எ) அகஸ்டின்(20), மனோஜ்(20) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

இதில் முக்கிய குற்றவாளி எனக் கூறப்படும் சபரி, அவரது வங்கி கணக்கை கொடுக்காமல் பிறரது வங்கி கணக்கை கொடுத்து அதில் பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சூழலில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல என நேற்று (ஜன. 12) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அதேபோல் ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இதற்காக அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவமடைய வேண்டும் எனவும், பள்ளிகளில் இருந்து இது சம்பந்தமாக அவர்களுக்கு விழிப்பணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக கார்கே தேர்வு! கூட்டணியிலும் ஆதிக்கம் செலுத்துகிறதா காங்கிரஸ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.