ETV Bharat / state

Exclusive : உக்ரைன் போரில் பலியான கர்நாடக மாணவர் - என்ன நடந்தது... விளக்குகிறார் கோவை மாணவி!

author img

By

Published : Mar 7, 2022, 7:17 PM IST

மருத்துவ மாணவி நந்திதா கனகராஜ்
மருத்துவ மாணவி நந்திதா கனகராஜ்

உக்ரைன் தாக்குதலில் உயிரிழந்த நவீனுக்கு, அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி உக்ரைனில் இருந்து கோவை வந்த மருத்துவ மாணவி பிரத்யேகமாக நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

கோவை : உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி போரைத் தொடங்கியது. தற்போது வரை அங்கு தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ்வில் மார்ச் 1ஆம் தேதி நடத்தப்பட்டத் தாக்குதல் சம்பவத்தின்போது, கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா (22) உயிரிழந்தார். இது இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் நாள்தோறும் தனி விமானம் மூலம் தாயகம் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் உக்ரேனில் இருந்து கோவை திரும்பிய மருத்துவ மாணவி நந்திதா கனகராஜ் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.

'உணவுப் பற்றாக்குறையால் தவித்தோம்'

அவர் கூறுகையில், 'கார்கீவ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். போர் தொடங்கிய நாள் முதல் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. உணவு, தண்ணீருக்குத் தட்டுப்பாடு இருந்தது. அரசு தங்களை மீட்கும் என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அது நடக்காததால் நாங்களே வெளி வந்தோம்.

மருத்துவ மாணவி நந்திதா கனகராஜ்
மருத்துவ மாணவி நந்திதா கனகராஜ்

அங்கிருந்து ராக்கிவ் பகுதிக்கு ரயில் மூலம் வந்து, அங்கிருந்து ரோமானிய எல்லைக்கு வந்து சேர்ந்தோம். விடுதியிலிருந்து வெளியே வந்தால் எது நடந்தாலும் நாங்களே பொறுப்பு எனக்கூறி விட்டுத்தான் வந்தோம். இன்னும் நிறைய மாணவர்கள் அங்கு உள்ளனர். அவர்களை விரைவாக இந்தியா அழைத்து வர வேண்டும். பதுங்கு அறையில் ஒருவாரம் உணவுப் பற்றாக்குறையால் நாங்கள் தவித்தோம்.

'எங்களுடைய சீனியர் நவீன் இறந்துவிட்டார்'

400 மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த நிலையில் அனைவருக்கும் தொடர்ந்து உணவு தர முடியாத நிலை, உயிர் வாழத் தேவையான உணவை மட்டும் சாப்பிட்டு இருந்தோம். கடந்த 1ஆம் தேதி நாங்கள் நடந்து செல்லும்போது திடீரென சாலையில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது.

எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அதில் சிக்கினார்கள். அதில் எவ்வளவு பேர் சிக்கினார்கள் எனத் தெரியவில்லை. மிகவும் பயமாக இருந்தது. உடனடியாக அங்கிருந்து ஓடிச்சென்று மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் பதுங்கிக்கொண்டோம்.

மருத்துவ மாணவி நந்திதா கனகராஜ்

பின்னர் தான் தெரிந்தது அந்த குண்டு வெடிப்பில் கர்நாடகாவைச் சார்ந்த, எங்களுடைய சீனியர் மாணவர் நவீன் இறந்து விட்டார் என்று. அது எங்களுக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. உக்ரைனில் உள்ளவர்கள் அன்பானவர்கள். அவர்கள் இந்த குண்டுவெடிப்பில் சிக்கி வருவது மனவேதனையை ஏற்படுத்துகிறது. தங்களுக்கு மொழி தெரியாவிட்டாலும் அவர்கள் எங்களை அன்பாக பார்த்துக் கொண்டனர்.

எங்களுக்கு உதவியவர்கள் குண்டுவெடிப்பில் சிக்கியதைப் பார்த்தபோது மிகவும் கவலையாக இருந்தது. மீண்டும் அங்கே சென்று படிக்க விரும்பம். காரணம், நாங்கள் படிக்கும் கல்லூரியில் போதிக்கப்படும் கல்வித் தரமாக உள்ளதால், அங்கேயே படிக்க விருப்பப்படுகிறேன்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : தூத்துக்குடியில் நாட்டிலேயே முதல்முறையாக சர்வதேச அறைகலன் பூங்கா: இதிலுள்ள முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.