ETV Bharat / state

வனத்துறை ஜீப்பை தூக்கி வீசிய யானை.. கோவையில் மீண்டும் அட்டகாசம்!

author img

By

Published : Jun 14, 2023, 7:43 PM IST

Covai elephant attack
கோவை யானை தாக்குதல்

கோவை அருகே ஊருக்குள் புகுந்த யானையை விரட்ட சென்ற வனத்துறையினரை ஜீப்போடு தூக்கி வீசிய ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் வனச்சரகம் மற்றும் மதுக்கரை வனச்சரகத்தில் 30க்கும் மேற்பட்ட யானைகள் தற்போது முகாமிட்டுள்ளது இந்த யானைகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகே உள்ள கிராமப் பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் நேற்று (ஜூன் 13) இரவு மதுக்கரை வனச்சரகம் ஆலந்துறை பகுதியில் ஒற்றை ஆண் யானை வனப்பகுதியிலிருந்து வெளியேறி சிறுவாணி - கோவை சாலையை நோக்கி வருவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அத்தகவலின் அடிப்படையில் வனக் காப்பாளர்கள் சந்திரிகா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் அந்த யானையை வனப்பகுதிக்கு விரட்டிவிடச் சென்றனர். அப்போது ஆலந்துறை அடுத்த முகாசிமங்கலம் பகுதியில் வனத்துறையினர் யானையைத் தேடிக்கொண்டிருந்த போது, திடீரென புதரின் மறைவிலிருந்து வந்த ஒற்றை ஆண் யானை வனத்துறையினர் சென்ற ஜீப்பைத் தந்தத்தால் குத்தி தள்ளியது, இதில் வனத்துறையினர் சென்ற ஜீப் தலைகீழாகக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இரண்டு பேர் லேசான காயமடைந்தனர் இதனை அடுத்து அவர்கள் கூச்சல் இட்டதால் அந்த யானை அங்கிருந்து வெளியேறியது. உடனடியாக அருகிலிருந்த ஊர் மக்கள் விரைந்து வந்து ஜீப்பில் சிக்கிய வனத்துறையினரை மீட்டனர், அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் பலத்த காயம் ஏற்படாமல் நூலிழையில் உயிர் தப்பினர். இதனை அடுத்து சிறுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இதனிடையே கோவை வனச்சரகம் மருதமலை மற்றும் கெம்பனூர் பகுதியில் 9 யானைகள் கொண்ட கூட்டம் ஊருக்குள் சுற்றி வந்த நிலையில் அதனை வனத்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு வனப்பகுதிக்குள் விரட்டினர் மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் எனவும் யானை தோட்டத்திற்குள் புகுந்தால் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்களாக யானையை விரட்ட முற்படக்கூடாது என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை,போளுவாம்பட்டி, கோயமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை என 7 வனச்சரகங்கள் உள்ளன. இவை அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் காணப்படிகிறது. மேலும் நாள்தோறும் வனப்பகுதியிலிருந்து யானைகள் வெளியேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தந்தங்களுக்காக யானைகள் வேட்டை: சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவின் கீழ் முதல் வழக்கு பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.