ETV Bharat / state

"அடுத்தவன் காசுல சம்சாரத்துக்கு சேலை வாங்கும் அண்ணாமலை" - கோவை செல்வராஜ் காட்டம்!

author img

By

Published : Jun 19, 2023, 6:48 PM IST

திமுக அரசை எதிர்க்க பாஜக அமலாக்கத் துறையை பயன்படுத்துகிறது என  கோவை செல்வராஜ் கூறியுள்ளார்
திமுக அரசை எதிர்க்க பாஜக அமலாக்கத் துறையை பயன்படுத்துகிறது என கோவை செல்வராஜ் கூறியுள்ளார்

திமுகவை மட்டும் குறிவைத்து தாக்கும் அமலாக்கத்துறை பாஜகவை மட்டும் விட்டு வைப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைமை கழக செய்தித் தொடர்பு துணை செயலாளர் செல்வராஜ் அடுத்தவன் கொடுக்கும் பணத்தில் அண்ணாமலை தனது மனைவிக்கு சேலை வாங்குவதாக காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

திமுக அரசை எதிர்க்க பாஜக அமலாக்கத் துறையை பயன்படுத்துகிறது என கோவை செல்வராஜ் கூறியுள்ளார்

கோயம்புத்தூர்: கோவை ஆர்.எஸ்.புரத்தில் திமுக தலைமை கழக செய்தி தொடர்பு துணை செயலாளர் செல்வராஜ், தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமலாக்கத் துறை கடந்த 9 ஆண்டுகளில் 3117 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 27 பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளது. பா.ஜ.க தங்களை எதிர்ப்பவர்களை ஒடுக்க அமலாக்கத் துறையைப் பயன்படுத்துகிறது. இந்தியாவில் இருக்கும் எதிர் கட்சிகளை ஒருங்கிணைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டு இருக்கின்றார். இதனால் 17 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க வெற்றி பெற முடியாது என்பதால் தான் இப்போது செந்தில் பாலாஜியை கைது செய்து நெருக்கடி கொடுக்கின்றனர். இதை எதிர்கொள்ள திமுக அரசும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் தயாராகவே இருக்கின்றனர்.

இந்திய அரசியலமைப்பு படி செயல் படாமல், அதிகாரத்தை மீறி செயல்படுவதால் தமிழக ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக இருக்கிறது. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை எல்லாவற்றிக்கும் பதில் சொல்ல சிபிஐ அதிகாரியா? அமலாக்கத் துறை அதிகாரியா?

சிபிஐ, அமலாக்கத் துறை பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு யார் அதிகாரம் கொடுத்தது?. அண்ணாமலை தனது வீட்டு வாடகை செலவிற்கு என நண்பர்களிடம் மாதம் 9 லட்சம் ரூபாய் வாங்கி வருகின்றார். இதுவே இரண்டு ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் வரை பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதை அமலாக்கத் துறை விசாரிக்காதா?” எனவும் கேள்வி எழுப்பினார்.

பணம் கொடுத்ததற்கும், பணம் வாங்கியதற்கும் வருமான வரியை அண்ணாமலையும், பணம் வாங்கியவரும் கொடுத்துள்ளனரா என்பதை மத்திய அரசும் தெளிவு படுத்த வேண்டும் எனவும், அமலாக்க துறை இதற்கு நடவடிக்கை எடுக்குமா? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், ஆருத்ரா நிதி நிறுவன வழக்கில் இருப்பவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் பா.ஜ.கவில் கட்சி பதவி கொடுத்ததாக, கைதானவர்கள் சொல்லி இருக்கின்றனர்.

இதற்கு பா.ஜ.க தலைமையும், அண்ணாமலையும் எந்த பதிலும் சொல்ல வில்லை எனவும் தெரிவித்தார். குற்ற பின்னணி கொண்டவர்களை பா.ஜ.கவில் சேர்த்து இருக்கும் நிலையில், அவர்களுக்கு திமுகவை பேச தகுதி இல்லை எனவும் தெரிவித்தார். “அதிமுக கட்சி மறைந்த தலைவர் ஜெயலலிதாவை, ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என இழிவு படுத்தியவர்களுடன் இன்னும் அதிமுக கூட்டணியில் இருக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன், விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் வீடுகளில் சோதனை நடத்தி குற்றபத்திரிகை தாக்கல் செய்யபட்டுள்ளது. கஞ்சா, குட்கா விற்பவர்களிடம் பணம் வாங்கி கொண்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும், டிஜிபியும் விற்பனை செய்ய அனுமதித்துள்ளனர். விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய சோதனையில் இருந்து 83 கோடி ரூபாய் எடுக்கபட்டது.

இதில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி போன்றவர்களுக்கு பணம் கொடுத்ததாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு அமலாக்க துறை எப்போது நடவடிக்கை எடுக்கும்?” எனவும் கேள்வி எழுப்பினார். “பா.ஜ.கவிடம் அதிமுக சரணாகதி அடைந்த பின்னர், விஜயபாஸ்கர் மீதான வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி அலுவலகத்திற்குள் நுழைந்த நபரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு அவரை தாக்கியுள்ளனர். அண்ணா சிலை அருகில் அவர் எப்படி இறந்தார் என்பதை உரிய முறையில் போலீசார் விசாரிக்க வேண்டும். தள்ளி விட்டு கொன்றாலும் அது தவறுதான்” எனவும் தெரிவித்தார்.

யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமிக்க முதல்வருக்கு அதிகாரம் உண்டு எனவும் எடப்பாடி பழனிச்சாமி சொல்பவர் அந்த கட்சியில் வேட்பாளராக இருக்க முடியாது மாறாக பா.ஜ.க சொல்பவர்தான் அதிமுக வேட்பாளராக இருக்க முடியும், தங்கமணி வேலுமணி தனி கோஷ்டி, சி.வி சண்முகம் ஒரு கோஷ்டி என அதிமுக இப்போது 7 கோஷ்டியாக இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

சுயநலத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகின்றார் எனவும், அவரிடம் எத்தனை லட்சம் கோடி இருக்கிறது என அனைவருக்கும் தெரியும் எனவும் குற்றம்சாட்டினார். ஆருத்ரா வழக்கில் சிக்கிய நபர்களுக்கு கட்சி பதவி வழங்க பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பணம் வாங்க வில்லை என சொல்லட்டும் பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.

பா.ஜ.கவில் நிர்வாகிகளாக இருப்பவர்களில் பலர், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகின்றனர் எனவும் குற்றம்சாட்டினார். “அண்ணாமலை நண்பர்களிடம் பணம் வாங்குவதாக சொல்கின்றார். மற்றவரிடம் காசு வாங்கி சம்சாரத்துக்கு சேலை எடுத்து கொடுக்கிற இந்த பொழப்பு தேவையா?. மாசம் 9 லட்ச ரூபாய் நண்பர்கள் சும்மா கொடுப்பாங்களா?, ஓசியில வாங்கி திங்கிறது கேவலமா இல்லையா? இதற்கு முன்பு இருந்த தலைவர்கள் எப்படி செயல்பட்டனர்” என தெரிவித்த அவர், அண்ணாமலை மாநில தலைவர் மாதிரியே இல்லாமல் கொள்ளை கூட்ட தலைவன் மாதிரி செயல்படுகின்றார் எனவும் தெரிவித்தார்.

அரவக்குறிச்சி தேர்தலில் ஓட்டுக்கு 1000 ரூபாய் வீதம் 20 கோடி எப்படி கொடுத்தார் அண்ணாமலை என கேள்வி எழுப்பிய அவர்,
பஸ்ஸ்டாண்டில் வெட்டிபேச்சு பேசும் நபர்களை போல மனநிலை பாதிக்கப்பட்டவரை போல பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செயல்படுகின்றார் எனவும் திமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஹைடெக் முறையில் வழக்கு சொத்துக்கள் கண்காணிப்பு: QR முறையை அறிமுகம் செய்த சென்னை காவல்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.