ETV Bharat / state

மேட்டுப்பாளையம்↔திருச்செந்தூர் பயணிகள் ரயில் வேண்டும்: வானதி கடிதம்

author img

By

Published : Dec 18, 2021, 8:15 AM IST

Updated : Dec 18, 2021, 8:33 AM IST

”மேட்டுப்பாளையம் - திருச்செந்தூர் ரயில் சேவை அமைக்க வேண்டும் ..!”: வானதி சீனிவாசன் கடிதம்
”மேட்டுப்பாளையம் - திருச்செந்தூர் ரயில் சேவை அமைக்க வேண்டும் ..!”: வானதி சீனிவாசன் கடிதம்

பாலக்காட்டிற்குப் பதிலாக மேட்டுப்பாளையத்திலிருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்குப் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.

கோவை: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், பாஜக மகளிரணி தேசியத் தலைவியுமான வானதி சீனிவாசன் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில், “கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்பட்ட ரயில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியிலிருந்து பயணிகள் ரயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ரயிலை கோவை அல்லது மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் என்று கோவையில் பல்வேறு அமைப்புகள், கோரிக்கைவிடுத்திருந்தனர். இதே கோரிக்கையை நானும் வலியுறுத்தினேன்.

ஆனால், டிசம்பர் 16ஆம் தேதிமுதல் பாலக்காட்டிலிருந்து திருச்செந்தூருக்கு முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

கோவைக்குப் பதிலாக பாலக்காட்டிலிருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு கோவை மாவட்ட மக்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் ரயில்வே அமைச்சரான தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளில் அதிகமாக வசித்துவருவதால் மேட்டுப்பாளையம், கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு ரயில் இயக்கப்படுவது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கோவை, தென் தமிழ்நாட்டு மக்களின் நலன்கருதி, அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பாலக்காட்டிற்குப் பதிலாக மேட்டுப்பாளையம் அல்லது கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்குப் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும்.

ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை மறு பரிசீலனை செய்து நல்ல முடிவெடுக்கத் தெற்கு ரயில்வே அலுவலர்களுக்கு ரயில்வே அமைச்சரான தாங்கள் உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:சேலத்தில் 5,000 கோடி முதலீட்டில் 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு: சிஐஐ அறிவிப்பு

Last Updated :Dec 18, 2021, 8:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.