ETV Bharat / state

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: 5 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!

author img

By

Published : Mar 10, 2023, 1:53 PM IST

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 5 பேரை காவலில் எடுத்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அவர்களை கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்: கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அன்று அதிகாலை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக, மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கார் சிலிண்டர் வெடித்ததில் கார் சிதறியதும், மேலும் காரில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போலீசார், அவரது வீட்டிலிருந்து சுமார் 75 கிலோ வெடி மருந்துகள், சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர், இது தொடர்பாக போலீசார் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency, NIA) அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான கோப்புகள் ஒப்படைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (NIA) விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில், ஜமேசா முபின் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகவும் தெரியவந்தது. மேலும் இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார் எனவும், இதற்குக் கைது செய்யப்பட்ட 6 பேர் உடந்தையாக இருந்து சதி செயலில் ஈடுபட்டதாகவும், ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ் கான் ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் தீவிரவாத செயல்களுக்குத் தயாராகும் வகையில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், ஆசனூர், கடம்பூர் ஆகிய வனப்பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கூட்டம் நடத்தியதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட உமர் பாரூக் நடத்திய இக்கூட்டத்தில் ஜமேசா முபின், முகமது அசாரூதின், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி பங்கேற்றதாகவும் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 பேரை, அவ்வப்போது கோவைக்கு அழைத்து வந்து அவர்கள் குடியிருந்த பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், பெரோஸ், நவாஸ் இஸ்மாயில், உமர் ஃபரூக், பெரோஸ்கான் ஆகிய ஐந்து பேரை கோவைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், என்ஐஏ அதிகாரிகள் 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவை நகரில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: சங்கரன்கோவில் முக்கிய வீதியில் நாட்டு வெடிகுண்டா? - நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.