ETV Bharat / state

கோவையில் திருவள்ளுவர் சிலை திறப்பு.. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த மக்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 5:07 PM IST

கோயம்புத்தூரில் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை
கோயம்புத்தூரில் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை

Coimbatore Thiruvalluvar statue: கோயம்புத்தூரில் 57.66 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர்: சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி, கோவை மாவட்டத்தில் 57.66 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

திட்டங்கள்: ஆடிஸ் வீதியில் மாநகராட்சி சார்பில் ரூ.2.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையம், குறிச்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 52.16 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை, குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள தமிழர் பாரம்பரிய சிலைகள், உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அனுபவ மையம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இதன் நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சி, அறிவுசார் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றி செல்வன் உள்பட பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கும் நேரத்தில், இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொலைக்காட்சிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணத்தால் ரத்தானது. இதனால் முதலமைச்சரின் நேரலையை செல்போனில் பார்த்தனர். சிறிது நேரம் கழித்து தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு, நேரலை இணைக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, குறிச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் திருவள்ளுவர் சிலை முன்பு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த குறிச்சி பகுதியில் மிதிவண்டி பாதை, நடைபாதை, உணவகங்கள், அலங்கார குடைகள், சிறுவர் விளையாட்டு திடல், பாரம்பரிய சிலைகள் என ஏராளமானவை அமைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் அமைக்கப்பட்டுள்ள அனுபவ மையத்தை பார்வையிட்டனர். இங்கு 3டி முப்பரிமாண காணொளி, கோவை மாநகர சிறப்புகளை விளக்கும் வகையில் 3டி காணொளி, குழந்தைகள் விளையாட்டு 3டி காணொளி ஆகிய கட்டமைப்புகள், ஜிப் லைன், இரண்டு பேர் ஓட்டும் சைக்கிள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையாளரும் சைக்கிளை ஓட்டினர்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு; எடப்பாடி பழனிசாமி நேரில் சாட்சியம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.