ETV Bharat / state

அமைச்சருக்கு கமிஷன் வரவே தமிழ்நாடு மின்சார வாரியம்- அண்ணாமலை

author img

By

Published : Oct 25, 2021, 6:13 AM IST

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்பான காணொலி
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்பான காணொலி

மின்சாரத்துறை அமைச்சருக்கு கமிஷன் வருவதற்காகவே தமிழ்நாடு மின்சாரத்துறை வாரியம் செயல்படுகிறது என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: கோவையின் கொடிசியாவில் உள்ள இஸ்கான் கோயிலில், வங்காளதேசத்தில் நவராத்திரி பண்டிகையின் போது முழு நேர ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வங்காளதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர். அங்கே நடந்து முடிந்த நவராத்திரி பண்டிகையின்போது, இஸ்கான் கோயிலில் முழு நேரமாக சேவை செய்து வந்த ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்பான காணொலி

சிப்ட் அடிப்படையில் வேலை

இந்தியாவில் பல மதங்கள் இருந்தும், நமது சட்டம் அனைத்து மதங்களையும் சமமாக பாவித்து பாதுகாத்து வருகிறது. வங்காளதேசத்தில் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு, சிறுபான்மையினர் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இதற்கு அந்த நாட்டினுடைய அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் கூறியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியா வந்தடைந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதாக கொண்டுவரப்பட்ட சிஐஏ சட்டத்தை நினைக்கும்போது, நமது நாடு சிறுபான்மையினருக்கு வழங்கும் சட்ட ரீதியான உரிமையை மற்ற நாடுகள் கொடுப்பதில்லை எனத் தெரிகிறது. கட்டு மணி, கமிஷன் மணி, ஊழல் ஆரம்பித்து விட்டதாக நிறைய கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

இருப்பினும் இன்னமும் கூட தமிழ்நாடு முதலமைச்சர் மௌனம் கடைபிடிப்பது ஏன்?. தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வீட்டில், ஆதிதிராவிடர் விடுதி பணியாளர்களிடம் சிப்ட் அடிப்படையில் வேலை வாங்கப்படுகிறது. ஆட்சி அமைந்த ஐந்து மாதங்களுக்குள்ளேயே இவ்வளவு பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.

கமிஷன் வரவே மின்சார வாரியம்

மத்திய அமைச்சர் பிரகலான் ஜோஷி இந்தியாவில் எங்கும் நிலக்கரி தட்டுப்பாடு வராது எனக் கூறியுள்ளார். தமிழ்நாடு அமைச்சர் நிலக்கரி தொடர்பாக பேசுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது. ஏனெனில் நிலக்கரி ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்யாமல் உள்ளனர். அதேபோல் மின்சாரத்தை ரூ. 20க்கு வாங்கவில்லை எனக்கூறியது தொடர்பாக கதை சொல்கிறார்கள். தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவதற்குதான், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளது.

தமிழ்நாட்டு மக்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக அல்லாமல், மின்சாரத்துறை அமைச்சருக்கு கமிஷன் வருவதற்காகதான் இந்த வாரியமே செயல்படுகிறது. முதலில் அணில் மீது பழியை போட்டார்கள். இதேபோல்தான் இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடும் கிடையாது. தற்போது 60 லட்சத்திற்கும் மேலான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

வட்டியும், முதலுமாக...

அரசியலுக்காக மட்டுமேதான் பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள். ஆதாரப்பூர்வமாக குற்றம் சுமத்த எந்தவித முகாந்திரமும் கிடையாது. இந்த அரசு ஊழலை நிறுத்த வேண்டும். பில்லை சரி செய்ய நான்கு, ஒப்பந்தத்துக்கு 15 விழுக்காடு என்ற நிலையிலேயே தமிழ்நாடு உள்ளது. ஊழல் செய்தவர்கள் எங்கிருந்தாலும் தூக்கி கொண்டு வருவோம் என்ற பிரதமரின் கூற்று, தமிழ்நாடு அரசுக்கும், அமைச்சர்களுக்கும் பொருந்தும்.

பாஜகவை எப்படி கையாள வேண்டும் என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். பாஜகவினர் 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம். தொட்டு பார்க்கட்டும். வட்டியும், முதலுமாக திருப்பிக் கொடுப்போம். பாஜக அமைப்பு 11 கோடி உறுப்பினர்களைக் கொண்டது.

செந்தில் பாலாஜி, சேகர் பாபு ஆகியோர் ஒரு தொகுதியோட ராஜா போல சுற்றி வருகின்றனர். ஊழல் செய்தால் தட்டிக் கேட்போம். பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாக பேசியதாக ஆதாரங்கள் கொடுத்தும், திமுக ஐடி பிரிவு தலைவர் பேருக்கு கட்சியை விட்டு நீக்கப்படுகிறார். காவல்துறை நேர்மையாக இருந்தால் சரி சமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்த வைகோ நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? துரை வைகோவுடன் நேர்காணல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.