ETV Bharat / state

மனைவிக்கு நகைகள் போட்டு அழகு பார்க்க ஆசை.. பிலிப்ஸ் நிறுவனத்தில் 5 கோடி மோசடி.. பலே இளைஞர்கள் சிக்கியது எப்படி?

author img

By

Published : Jul 12, 2023, 10:53 PM IST

உலகப் புகழ்பெற்ற பிலிப்ஸ் நிறுவனத்தில் சீனியர் கணக்காளராக பணியாற்றி வந்தவர், தனது மனைவிக்கு நகைகள் வாங்கி அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என நினைத்து, நிறுவனத்தின் பணம் ரூ.5 கோடியை நூதன முறையில் திருடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: உலக அளவில் கொடிகட்டி பறக்கும் எல்க்ட்ரானிஸ் நிறுவனம் பிலிப்ஸ் (PHILIPS). உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகின்றன. இவற்றுள் 156 நாடுகளில் உள்ள பிலிப்ஸ் நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை தலைமை அலுவலகம் PHILIPS GBS LLP சென்னை தரமணியில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தரமணியில் உள்ள நிறுவனத்தில் மேனஜராக வேலை செய்து வரும் ரமேஷ் சொக்கலிங்கம் என்பவர் சென்னை மத்திய குற்றபிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “எங்களது நிறுவனம் அக்கௌண்டிங் மற்றும் ஐடி சம்மந்தமான துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைத்து நடவடிக்கைகளுக்கும் SAP என்னும் சாப்ட்வேரை பயன்படுத்தி வருகிறோம்.

இந்த SAP சாப்ட்வேர் மூலமாக தான் உலகம் முழுவதும் உள்ள தங்கள் நிறுவனங்களின் கணக்கு வழக்குகள், பணபரிமாற்றம் நடைபெற்று வருகிறது. எங்களது நிறுவனத்தில் சீனியர் அக்கௌண்டிங் ஸ்பெசலிஸ்ட் ஆக பணியில் சேர்ந்த அகஸ்டின் சிரில் என்பவரும் மற்றொரு ஊழியருமான ராபின் கிறிஸ்டோபர் என்பவரும் சேர்ந்து ரூபாய் 5 கோடி அளவில் மோசடி செய்துள்ளனர். அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்” என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள் மோசடி தடுப்பு பிரிவு காவல் துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, காவல் ஆய்வாளர் ரேவதி தலைமையிலான காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அகஸ்டின் சிரில் மற்றும் அவரது நண்பரான ராபின் கிறிஸ்டோபர் ஆகிய இருவரும் போலியான வங்கி கணக்கு மூலம் வெளிநாட்டுக்கு பணத்தை அனுப்பி, பின் தங்களது வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றி மோசடி செய்திருப்பது அம்பலமானது.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பணம்
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பணம்

இந்த நிலையில் குற்றவாளிகளின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பூர்வீக வீட்டிலும், அவர்களது நெருங்கிய உறவினர்கள் வீட்டிலும் நீதிமன்ற உத்தரவுப்படி காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அகஸ்டின் சிரில், ராபின் கிறிஸ்டோபர் தங்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 215 சவரன் தங்க நகைகள், 6 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு கார் மற்றும் ஒரண்டு இருசக்கர வாகனங்கள், லேப்டாப், செல்போன்கள் மற்றும் வழக்கு சம்மந்தப்பட்ட ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து, தலைமறைவாக இருந்த இருவரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து, அவர்களது செல்போன் சிக்னல் மூலமாக பரமக்குடியில் தலைமறைவாக இருந்த ராபின் கிறிஸ்டோபர் மற்றும் சென்னை அண்ணா நகரில் தலைமறைவாக இருந்த அகஸ்டின் சிரில் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் நிறுவனத்தில் சீனியர் அக்கௌண்டிங் ஸ்பெசலிஸ்ட் ஆக பணியில் சேர்ந்த அகஸ்டின் சிரில் என்பவருக்கு பணத்தின் மீது பேராசை இருந்துள்ளது. மேலும், அவரது மனைவிக்கு நகைகள் அணிவித்து அவரை அழகு பார்க்க வேண்டும் என நினைத்திருக்கிறார். இதனால், திட்டம் தீட்டிய அகஸ்டின், அவருடைய SAP அக்கௌண்டின் யூசர் ஐடியை முறைகேடாக பயன்படுத்தி நிறுவனத்தின் பணத்தை திருட திட்டமிட்டிருக்கிறார்.

அதன்படி, நிறுவனத்தின் பணத்தை ஸ்பெயினில் (Spain) இருக்கும் அவரது சித்தப்பா மற்றும் பெல்ஜியம் (Belgium) பகுதியில் இருக்கும் தனது நண்பர்கள் கணக்கிற்கு சர்வதேச கேட்-வே மூலம் பணம் அனுப்பியுள்ளார். பின்னர் அங்கிருந்து, தமிழ்நாட்டில் உள்ள தனது மாமனார், மாமியார், மச்சான் மற்றும் நண்பர்கள் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப சொல்லி திருப்பி பெற்றுக்கொண்டு அதன் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடிக்கு அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அகஸ்டின் சிரிலின் நண்பர் ராபின் கிறிஸ்டோபர் என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. உலகத்தின் 156 நாடுகளில் உள்ள பிலிப்ஸ் நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை தலைமை அலுவலகமாக சென்னை தரமணி அலுவலகம் இயங்குவதால், நாளொன்றுக்கு பல நூறு கோடிகள் இங்கிருந்து பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுக சிறுக மோசடி செய்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இத்தகைய மோசடியில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நினைத்தது போல மோசடி நடந்ததை தரமணி அலுவலகத்தில் யாரும் கண்டுபிடிக்கவில்லை என்பதும் வெளிநாட்டிலிலுள்ள அலுவலகத்தில் பணப்பரிவர்த்தனை சரிபார்ப்பின்போது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டு, அதன் மூலமாக சென்னை அலுவலகத்துக்கு தெரியவந்தது என மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

மோசடி செய்த பணத்தில் மனைவிக்கு ஏராளாமான நகைகள் மற்றும் புதிய கார், மடிக்கணின், இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை வாங்கி சொகுசு வாழ்க்கையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. மீதமுள்ள பணத்தை கைப்பற்றும் முயற்சியில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Chhattisgarh: மீண்டும் பழங்குடியின இளைஞர் மீது தாக்குதல்... இப்ப என்ன காரணம் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.