ETV Bharat / state

சென்னையில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளை காண 25,000 பேர் மெட்ரோ ரயிலில் பயணம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 8:42 PM IST

சென்னையில் நடைபெற்ற 5 உலகக் கோப்பை லீக் போட்டிகளை காண்பதற்காக மெட்ரோ ரயிலில் மொத்தம் 25,000 ரசிகர்கள் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரொ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

World Cup 2023 Matches in Chennai Chepauk
சென்னையில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளை காண 25,000 பேர் மெட்ரோ ரயிலில் பயணம்

சென்னை: உலகக் கோப்பை 2023 போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்த முறை இந்திய அணி விளையாடும் ஒரு ஆட்டம் உட்பட 5 லீக் ஆட்டங்கள் முறையே அக்டோபர் 8ஆம் தேதி இந்தியா Vs ஆஸ்திரேலியா போட்டியும், அக்டோபர் 14ஆம் தேதி நியூசிலாந்து Vs வங்கதேசம் போட்டியும், அக்டோபர் 18ஆம் தேதி நியூசிலாந்து Vs ஆப்கானிஸ்தான் போட்டியும், அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் Vs ஆப்கானிஸ்தான் போட்டியும், அக்டோபர் 27ஆம் தேதி பாகிஸ்தான் Vs தென் ஆப்ரிக்கா போட்டியும் நடைபெற்றன.

சென்னை மெட்ரொ ரயில் நிறுவனம் இதற்காக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சென்னையில் உலகக் கோப்பை போட்டி நடைபெறும் நாட்களில் மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஐந்து போட்டிகளை காண்பதற்காக, மெட்ரொ ரயிலில் மொத்தம் 25,000 ரசிகர்கள் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று (நவ.3) தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில்," சென்னை எம்.ஏ.சிதம்பரம் சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெற்றன. அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தடையற்ற பயணத்தை வழங்குவதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

சென்னையில் உலகக் கோப்பை போட்டி நடைபெற்ற நாட்களில் மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற முதல் 2 கிரிக்கெட் போட்டிக்கான பயணச்சீட்டுகள் வைத்திருந்த பயணிகளுக்கு போட்டியை பார்த்துவிட்டு திரும்பும்போது, மெட்ரோ ரயிலில் இலவச பயணம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தனியார் நிறுவனத்துடன் இணைந்து, அதன் பிறகு நடைபெற்ற 3 போட்டிகளில், கிரிக்கெட் போட்டிகான டிக்கெட்டை வைத்துக் கொண்டு கட்டணமின்றி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். மேலும், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து போட்டி நடைபெற்ற சிதம்பரம் மைதானத்திற்கு மெட்ரோ இணைப்பு பேருந்துகளை மொத்தம் 25,000 கிரிக்கெட் ரசிகர்கள் பயன்படுத்தியுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை- நெல்லை இடையே 'கரீப் ரத்' சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.