Audio Leak: திருச்சி சூர்யாவிற்கு வாய் பூட்டு போட்ட பாஜக; நடந்தது என்ன?

author img

By

Published : Nov 22, 2022, 5:58 PM IST

திருச்சி சூர்யாவிற்கு வாய் பூட்டு போட்ட பாஜக

பாஜக பெண் நிர்வாகியுடன் திருச்சி சூர்யா பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சி சூர்யாவிற்குத் தடை விதித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: திமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் திருச்சி சிவாவின் மகன் சூர்யா இணைந்தார். இணைப்பின் போது "திமுகவில் இருந்து 90 விழுக்காடு பேர் பாஜகவில் விரைவில் சேர்வார்கள்" என சூர்யா கூறியது, இவரின் மீதான எதிர்பார்ப்பைக் கிளப்பியது.

கட்சியில் இணைந்த சிலநாட்களில் சூர்யாவிற்குப் பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது. திமுகவில் இருந்து பாஜகவிற்கு வந்ததால், திமுகவில் உள்ள முக்கியத் தலைவர்களைப் பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார். பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக கட்சி நிகழ்ச்சிகளில் காணப்பட்டார்.

இந்நிலையில், பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவராக உள்ள டெய்சி சரணிடம் ஆபாசமாகப் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் பேசிய சூர்யா, "நான் ஓபிசி தலைவராக இருக்கிறேன். என்னை விட்டுவிட்டு எப்படி நீங்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தலாம்.

நாளைக்கு என்னுடைய சாதிக்காரனை ஏவி விட்டு உன்னுடைய கதையை முடிக்கிறேன். உன்னுடைய மருத்துவமனையில் புகுந்து அனைவரையும் வெட்டிவிடுவேன். நீ எப்படி அந்தப் பதவியில் இருக்கிறாய் என்பதைப் பார்த்து விடுகிறேன். அண்ணாமலை, மோடி, அமித் ஷா இப்படி நீ யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள். அப்படிபட்ட திமுகவிலேயே ரெளடியிசத்தைப் பார்த்தவன்" என கடுமையாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார்.

திருச்சி சூர்யாவின் இந்த ஆடியோ விவகாரம், பாஜவில் உள்ள பெண் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாஜவில் இணைந்த சில மாதங்களிலேயே சூர்யாவின் இந்தச் செயல்பாடுகள், பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவை டெய்சி சரண், பாஜகவின் தலைமைக்கு கொண்டு சென்றார். அப்போது, திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

வைரலாகும் திருச்சி சூர்யாவின் ஆடியோ

அதன் அடிப்படையில் சூர்யாவிற்குத் தடை விதித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். "இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து அடுத்த 7 நாட்களுக்குள் கட்சி தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டும் - ஹெச்.ராஜா கூறிய காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.