ETV Bharat / state

பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.. அடுத்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 12:20 PM IST

Updated : Dec 21, 2023, 12:26 PM IST

அமைச்சர் பதவியை இழக்கிறார் பொன்முடி
அமைச்சர் பதவியை இழக்கிறார் பொன்முடி

Minister Ponmudi case: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது பதவியின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

சென்னை: கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2016ஆம் ஆண்டு மேல் முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 19 அன்று, வருமானத்துக்கு அதிகமாக பொன்முடி சொத்து சேர்த்தது நிரூபணமாகிறது என நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

மேலும், டிசம்பர் 21ஆம் தேதியான இன்று, தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தீர்ப்பில் கூறி இருந்தார். இதன்படி, இன்று அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி.. மத்திய அமைச்சர் கூறியது என்ன?

அமைச்சர் பொன்முடி தேர்தலில் போட்டியிட முடியாது: இந்நிலையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8(1)-இன் படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி தகுதி இழப்பிற்கு ஆளாக நேரிடும்.

அந்த வகையில், தற்போது அமைச்சர் பொன்முடி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தகுதி இழப்பிற்கு ஆளாகியுள்ளார். மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்திற்கு தண்டனை விதித்து, 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதால் அமைச்சர் பொன்முடிக்கு உடனடியாக பதவி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட பிறகும், அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. தற்போது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அவருடைய எம்.எல்.ஏ பதவியை இழந்துள்ளார். மேலும் அமைச்சர் பதவியை பொன்முடி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

Last Updated :Dec 21, 2023, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.