ETV Bharat / state

கிராம சபைக் கூட்டத்தில் யாருக்கு அதிகாரம்? ... தீர்வு சொல்லும் நந்தகுமார்!

author img

By

Published : Jan 24, 2021, 2:03 PM IST

Updated : Jan 24, 2021, 5:15 PM IST

கிராம சபைக் கூட்டம் கூட்டுவதற்கான அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்றும், எந்தெந்த காரணங்களுக்காக நிறுத்தி வைக்கலாம் போன்ற கேள்விகளுக்கான பதிலை தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளரான நந்தகுமார் வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளார்.

நந்தகுமார்
நந்தகுமார்

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3(2-A) யின்படி கிராம சபையைக் கூட்டும் அதிகாரம் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சித் தலைவருக்கு மட்டுமே இருக்கிறது. சட்டப்படியாக, கிராம சபைக் கூட்டத் தேதிக்கு ஏழு நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு கொடுத்து விட்டுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருட்கள் சம்பந்தமான தகவல்களை மக்களுக்குப் பகிர்ந்துவிட்டுக் கூட்டத்தைக் கூட்ட முழு அதிகாரம் படைத்தவர் கிராம ஊராட்சித் தலைவர்.

அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று, கிராம சபையைக் கரோனாவைக் காரணம் காட்டி, அதனை ரத்து செய்து உத்தரவிட்ட அரசு, தற்போது குடியரசு தினமான ஜனவரி 26இல் கிராம சபைக் கூட்ட அறிவிப்பு வெளியிடுவதுபோல் தெரியவில்லை. இப்போதுதான் கிராம சபையைக் கூட்ட யாருக்கு அதிகாரம் இருக்கிறது? என்ற கேள்வி மக்கள் மனதில் தோன்றுகிறது. இந்த சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் வகையில், தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளரான நந்தகுமார் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

சட்டப்படி கிராம சபையைக் கூட்டுவதற்கான அதிகாரம் யாருக்கு இருக்கிறது?

'கிராம சபையைக் கூட்டுவதற்கான அதிகாரம் முழுக்க முழுக்க ஊராட்சி மன்றத்தின், ஊராட்சித் தலைவரின் முடிவு மட்டுமே. மாநில அரசின் உத்தரவின் அடிப்படையில் அல்ல. எனவே, தயாராக உள்ள ஊராட்சித் தலைவர்கள், அதாவது ஏழு நாட்களுக்கு முன்பாகவே கூட்ட அறிவிப்பு கொடுத்துவிட்ட ஊராட்சித் தலைவர்கள், குடியரசு தின கிராம சபையைக் கூட்ட தற்போது தயாராக இருக்கிறார்கள். கூட்டத்திற்கான அறிவிப்பு அரசு கொடுக்கும் என காத்திருந்த தலைவர்கள் இன்றோ நாளையோ கிராம சபைக் கூட்டம் அறிவிப்பைக் கொடுத்துவிட்டு, ஏழு நாட்களுக்குப் பிறகு கூட்டத் தயாராக இருக்கிறார்கள். அனைவருக்கும் நாம் உறுதுணையாக இருப்போம்.

தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளரான நந்தகுமாரின் வீடியோ

கரோனா தொற்று பரவிவிடும் என்பது போன்ற செயற்கையான காரணங்களை முன்வைத்துக் கூட்டக் கூடாது என அரசு இனியும் சொல்லுமா?

டாஸ்மாக் மதுக்கடைகள், திரையரங்குகள், கட்சிக் கூட்டங்களில் பார்க்கும் மக்கள் கூட்டத்தைவிடவா, கிராம வெளியில் பொது இடத்தில் நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் கரோனா வந்துவிடப்போகிறது. எனவே, செயற்கையான காரணங்களை புறந்தள்ளி ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள நாம் அனைவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தந்திருக்கிற இந்த மிக முக்கியமான அதிகாரத்தைச் செயல்படுத்த முன்வருவோம்! கிராம ஊராட்சித் தலைவர்கள், கிராம சபைக் கூட்டங்களை கூட்ட ஒத்துழைப்புத் தருவோம்! துணை நிற்போம்!' என்றார், தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளரான நந்தகுமார்.

Last Updated :Jan 24, 2021, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.