ETV Bharat / state

9 மணிக்கு தீர்ப்பு.. 9.15 க்கு பொதுக்குழு? - எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ள அதிமுக பொதுக்குழு விவாதங்கள்!

author img

By

Published : Jul 8, 2022, 7:47 PM IST

9 மணிக்கு தீர்ப்பு.. 9.15 க்கு பொதுக்குழு - எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ள பொதுக்குழு விவகாரம்!
9 மணிக்கு தீர்ப்பு.. 9.15 க்கு பொதுக்குழு - எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ள பொதுக்குழு விவகாரம்!

அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்த தீர்ப்பு வருகிற ஜூலை 11 அன்று காலை 9 மணிக்கு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை: வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் நேற்று (ஜூலை 07) விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, சில கேள்விகளை முன் வைத்தார்.

நீதிபதியின் கேள்விகள்:

  • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா?
  • பொதுக்குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?
  • எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்?
  • பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்?

என்பது குறித்து விரிவான பதில் அளிக்க எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அதிமுகவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்று (ஜூலை08) பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று (ஜூலை 08) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயன் ஆஜராகி வாதிட்டார்.

ஈபிஎஸ் தரப்பு:

  • 2,432 பொதுக்குழு உறுப்பினர்கள், ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து பொதுக்குழுவில் முடிவெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
  • அதில் 2,190 பொதுக்குழு உறுப்பினர்களும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் நடத்த ஒப்புதல் அளித்ததால் பொதுக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
  • இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் ரத்து மற்றும் ஒற்றைத்தலைமை குறித்து முன்மொழிய தலைமைக் கழகத்திற்கு உரிமை உள்ளது.
  • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும், கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என கட்சி விதி கூறுகிறது.
  • கட்சியை நிர்வகிக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாத நேரத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் இருக்கின்றனர்.
  • பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்றால் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும். ஜூலை 11 அன்று பொதுக்குழுவை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ், ஒட்டுமொத்த கட்சியும் தனக்கு எதிராக உள்ளதாக கருதி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
  • கட்சி விதிகளை திருத்த செயற்குழுவுக்கு அதிகாரமில்லை என்பதால், செயற்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்த போதும், அதை பொதுக்குழுவில் முன் வைத்து ஒப்புதல் பெற தீர்மானிக்கப்பட்டது.
  • கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில், இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன.
  • திருத்தங்கள் பொதுக்குழுவில் வைக்கப்படாததால் அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட உள்கட்சி தேர்தலும் செல்லாது. அதனால் இரு பதவிகளும் காலியாகி விட்டன என தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டில் கட்சி நிர்வாகிகள் மூலமாக தான் வி.கே.சசிகலா இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யபட்டார்.
  • 30 ஆண்டுகள் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டில் இறந்த பிறகு இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்க தலைமைக் கழக நிர்வாகிகள் பரிந்துரை செய்தனர்.
  • ஆனால், அவர் சிறை சென்றார். பின்னர் 2016 ஜூலையில் கூட்டப்பட்ட பொதுக்குழுவிற்கும் தலைமைக் கழக நிர்வாகிகள் தான் அழைப்பு விடுத்தனர்.
  • அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தேவை என்பது கட்டாயம் இல்லை.
  • கட்சி விதிகளின் படி வழக்கமான பொதுக்குழுவுக்கு 15 நாட்களுக்கு முன் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
  • ஆனால் 20 சதவீத பொதுக் குழு உறுப்பினர்கள், பொதுக்குழுவை கூட்ட கோரினால் அடுத்த 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும்.
  • பொதுக்குழுவை கூட்ட உறுப்பினர்களுக்கு எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்க வேண்டும் என கட்சி விதி தெரிவிக்கவில்லை.
  • தகவலாகவோ? பத்திரிக்கை வாயிலாகவோ தெரியப்படுத்தினால் போதுமானது. அதனால், பிரச்னைகள் குறித்து ஓபிஎஸ் பொதுக்குழுவில் தான் விவாதித்திருக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு வந்திருக்க கூடாது.
  • தீர்மானம் கொண்டுவரவும், நிறைவேற்றவும் பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அங்கு எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க உரிமை உள்ளது.
  • எதிர் கருத்து இருந்தால் பொதுக்குழுவில் விவாதிக்கலாம். அதனை விடுத்து நீதிமன்றத்தை நாடி, நிவாரணம் பெற முடியாது.
  • கட்சி நலனுக்காக வழக்கு தொடர்ந்ததாக கூறும் ஓபிஎஸ், தனக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். எனவே ஓபிஎஸ் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஓபிஎஸ் தரப்பு: தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் ஆஜராகி வாதிட்டார். அப்போது,

  • 2021 டிசம்பர் செயற்குழு தீர்மானத்தின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர். அது முறைப்படி தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.
  • ஒட்டு மொத்தமாக உள்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டும் காலியாக இருப்பதாக எப்படி கூற முடியும்?
  • தலைவர்கள் உயிருடன் இல்லாத போதுதான் பதவி காலியானதாக கருத முடியும்.
  • அதிமுகவை பொறுத்தவரை 1987 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது.
  • கட்சியில் ஓபிஎஸ்க்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை என்பது தவறு. முதலமைச்சராக இருந்த அவரின் பின்னாள் ஏராளமான தொண்டர்கள் உள்ளனர்.

இவ்வாறு இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜூலை 11 ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். ஆனால், ஜூலை 11 அன்று காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு வழக்கு; ஈபிஎஸ் தரப்பின் காரசாரமான வாதங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.