ETV Bharat / state

3.20 கோடி ரூபாய் மோசடி செய்த அரசு அலுவலர் கைது!

author img

By

Published : Aug 18, 2021, 8:07 AM IST

Updated : Aug 18, 2021, 9:43 AM IST

ஒன்றிய அரசு அலுவலர் கைது
ஒன்றிய அரசு அலுவலர் கைது

கரோனா உபகரணங்களை குறைந்த விலையில் பெற்று தருவதாகக் கூறி 3.20 கோடி ரூபாய் மோசடி செய்த ஒன்றிய அரசு அலுவலரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை: அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சொந்தமாக விவசாய உரம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், ஒன்றிய அரசு அலுவலரான வி.கே ராஜன் என்பவர் 3.20 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் ஒன்றை அளித்தார்.

அப்புகாரில், ”அம்பத்தூர், ஒரகடம் பகுதியைச் சேர்ந்த கே.வி.என்.ராஜன் (52) என்பவர் ஒன்றிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸில் துணை பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். கரோனா உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தங்களது நிறுவனத்திற்கு உபகரணங்கள் ஆர்டர் கிடைத்துள்ளதாக ராஜன் என்னிடம் கூறினார்.

ஆனால் அரசு நிறுவனத்தால் பண முதலீடு செய்ய முடியாது என்பதால் தனியார் முதலீடு செய்து ஒன்றிய, மாநில அரசு மருத்துவமனைகளுக்கு கரோனா உபகரணங்கள் விநியோகித்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனவும் தெரிவித்தார்.

3.20 கோடி ரூபாய் மோசடி

மேலும் அவருக்குத் தெரிந்த மூன்று நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யச் சொன்னதால் 3.20 கோடி ரூபாயை முதலீடு செய்தேன். பின்னர் நீண்ட நாள்களாக கமிஷன் பணம், கரோனா உபகரணங்கள் என எதுவுமே கிடைக்காததால் இதுகுறித்து ராஜனிடம் கேட்டபோது அவர் மேலும் காலம் தாழ்த்தினார்.

இதனால் சந்தேகமடைந்து சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்குச் சென்று விசாரித்தபோது அது கரோனா உபகரணங்கள் விற்கும் நிறுவனம் இல்லை எனத் தெரியவந்தது. எனவே உடனடியாக அரசு அலுவலர் ராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசு அலுவலர் கைது
இப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த ராஜனைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் முன்னதாக, நீண்ட நாள்களாக தலைமறைவாக இருந்து வந்த ராஜனை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது ராஜனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : 3ஆவது அலை வந்தாலும் சமாளிக்க அரசு தயார் - மா. சுப்பிரமணியன்

Last Updated :Aug 18, 2021, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.