ETV Bharat / state

சென்னை வில்லிவாக்க கொள்ளை விவகாரத்தில் திடீர் திருப்பம்.. கூலிப்படையை ஏவிய உறவினர்கள் கைது..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 6:53 PM IST

Etv Bharat
Etv Bharat

Villivakkam Robbery: சென்னை வில்லிவாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியினரை கத்தி முனையில் கட்டிபோட்டு நகை, பணம் கொள்ளை அடித்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, கூலிப்படை ஏவி உறவினர்களே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சென்னை: வில்லிவாக்கம் சிட்கோ நகர் 2-வது பிரதான சாலையில் வசித்து வருபவர் சோழன் (66). இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு வனஜா என்கிற மனைவியும், இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மூன்று பிள்ளைகளும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். மேலும் சோழன், அவரது மனைவி வனஜாவுடன் வில்லிவாக்கம் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (செப்.23) இரவு வழக்கம்போல் இருவரும் சாப்பிட்டு முடித்து, வீட்டை பூட்டிவிட்டு படுக்கை அறைக்குத் தூங்கச் சென்றுள்ளனர். பின்னர், அதிகாலை 3 மணி அளவில் யாரோ வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு, வனஜா கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது, திடீரென வீட்டிற்குள் புகுந்த ஐந்து பேர் கொண்ட மர்மகும்பல், கருப்பு முகமுடியை அணிந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மர்மநபர்கள் கத்தியை சோழன் மற்றும் அவரது மனைவியின் கழுத்தில் வைத்து மிரட்டி, வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள், வனிதா கழுத்தில், காதில் அணிந்திருந்த தங்க சங்கிலி, தங்க கம்மல் உள்ளிட்ட 70 சவரன் தங்க நகைகளையும், வீட்டில் வைத்திருந்த ரூ.3.50 லட்சம் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றையும் கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் அந்த மர்மகும்பல், வயதான தம்பதியினர் இருவரின் கை, கால்கள் மற்றும் வாயை துணி வைத்து கட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து வில்லிவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வில்லிவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, மோப்ப நாய் வைத்து சோதனை செய்தும், தடவியல் நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், முகமுடி அணிந்து வந்து கொள்ளையடித்த கும்பலை கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வயதான தம்பதியினர் தனியாக வசித்து வருவதை பயன்படுத்தி, அவர்களது உறவினரான ராமு, ராதா ஆகியோர் திட்டம் தீட்டி கூலிப்படைகளை ஏவி இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

இதையடுத்து வில்லிவாக்கம் போலீசார் ராதா மற்றும் ராமு ஆகிய இருவரை கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கத்தியை காட்டி தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், தனியாக வாசித்து வரும் தம்பதியினரிடம், உறவினர்களே கூலிப்படை ஏவி நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஆவடியில் விரைவு ரயில் மோதி 2 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.