ETV Bharat / state

"நல்ல நினைவுகளோடு இறக்க வேண்டும்..." - ஒரு மாதத்திற்கு முன்பே உருக்கமாக பதிவிட்ட சின்னத்திரை நடிகையின் கணவர்!

author img

By

Published : Aug 4, 2023, 4:12 PM IST

சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், தனது கணவர் குறித்து நடிகை ஸ்ருதி சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதேபோல், ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் ஒரு மாதத்திற்கு முன்பாக பதிவிட்ட வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

Death
நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா

சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலமானவர், சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. 'நாதஸ்வரம்' சீரியலில் இவரது கதாபாத்திரத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா, வாணி ராணி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார். கடந்த ஆண்டு ஜிம் பயிற்சியாளரான அரவிந்த் சேகரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா திருமணம் செய்து கொண்டார்.

ஃபிட்னஸில் ஆர்வம் கொண்டவரான அரவிந்த் சேகர், கடந்த ஆண்டு ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 'மிஸ்டர் தமிழ்நாடு 2022' பட்டம் வென்றார். திருமணத்திற்குப் பிறகு சென்னை சைதாப்பேட்டையில் இருவரும் வசித்து வந்தனர். இருவரும் இஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிடுவார்கள். இவர்களது ரீல்ஸ் வீடியோக்கள் அவர்களது ரசிகர்களிடையே பாராட்டு பெற்று வந்தன.

இதனிடையே கடந்த 2ஆம் தேதி இரவு, வீட்டில் இருந்தபோது சுமார் 11.30 மணியளவில் அரவிந்த் சேகருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே மனைவி ஸ்ருதி, அரவிந்த் சேகரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அரவிந்த் சேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். திருமணமான ஒரு ஆண்டிலேயே ஸ்ருதி சண்முகப்பிரியாவுக்கு பேரிழப்பு ஏற்பட்டுவிட்டதாக அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கணவர் இறப்பு குறித்து நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா தனது இஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதில், "உன் உடல் மட்டும்தான் என்னை விட்டு பிரிந்து சென்றுள்ளது. ஆனால், உன்னுடைய ஆன்மாவும், மனமும் எப்போதுமே என்னுடனே இருக்கிறது. அது எப்போதும் என்னை பாதுகாக்கும். உன் மேல் உள்ள காதல் இப்போதுதான் மேலும் மேலும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. வாழ்நாள் முழுமைக்கும் தேவையான நிறைய நினைவுகளை இருவரும் சேர்த்து வைத்திருக்கிறோம். மிஸ் யூ, நீ என் அருகில் இருப்பது போல உணர்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்த் சேகரின் இன்ஸ்டாகிராம் பதிவு
அரவிந்த் சேகரின் இன்ஸ்டாகிராம் பதிவு

இதற்கிடையில், அரவிந்த் சேகர் ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், "நல்ல நினைவுகளோடுதான் இறக்க வேண்டும், நிறைவேறாத கனவுகளோடு அல்ல" என அரவிந்த் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Nitin Chandrakant Desai: பிரபல கலை இயக்குநர் நிதின் தேசாய் தற்கொலை: சோகத்தில் பாலிவுட் ஆழ்ந்த திரையுலகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.