ETV Bharat / state

காவிரி பிரச்னைக்கு தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 6:49 PM IST

காவிரி பிரச்னைக்கு தமிழக அரசு உரிய தீர்வு காணுக!- டிடிவி தினகரன் வலியுறுத்தல்
காவிரி பிரச்னைக்கு தமிழக அரசு உரிய தீர்வு காணுக!- டிடிவி தினகரன் வலியுறுத்தல்

TTV Dhinakaran about Cauvery issue: காவிரி பிரச்னைக்கு தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும் எனவும், இல்லையென்றால் அமமுக போராட தயங்காது எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை: டெல்லியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 28) நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில், காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட பரிந்துரை செய்யப்பட்டது. இதனால், தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது.

இதனை ஏற்க மறுத்த தமிழ்நாடு அரசு, நிலுவையில் உள்ள 54 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிடுமாறு வலியுறுத்தியது. இதற்கு போதிய அளவில் மழை இல்லாத காரணத்தால் அதிகளவில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் செயல் நீதிக்கு புறம்பானது, கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டிற்கு தினந்தோறும் 5 ஆயிரம் கன அடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு ஏற்க மறுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'INDIA' கூட்டணியால் காவிரி நீரை பெற்று தமிழகத்திற்கு விடியல் தர இயலுமா? - ஆளுநர் தமிழிசை கேள்வி

மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிந்து வருவதால் காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடியை தொடங்கிய விவசாயிகள், தற்போது பயிர்களை காப்பாற்ற முடியுமா என்ற சந்தேகத்தோடு தவித்து வருகின்றனர். குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் மேட்டூர் அணையை திறந்துவிட்டோம் என மார்தட்டி பெருமை பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாநிலத்தில் இருந்து கூட உரிய நீரை பெற முடியாமல் தமிழ்நாட்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்க காரணமாகி உள்ளார்.

  • காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் செயல் நீதிக்கு புறம்பானது, கடும் கண்டனத்திற்குரியது.

    தமிழ்நாட்டிற்கு தினம் தோறும் 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி…

    — TTV Dhinakaran (@TTVDhinakaran) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கர்நாடக அரசுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு வலுவான வாதங்களை முன்வைத்து தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தீர்ப்பை பெற வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

திமுக கூட்டணியில் இருக்கும் கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சரை நேரில் சந்தித்து, காவிரி பிரச்னைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உரிய தீர்வு காண வேண்டும். இல்லையெனில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளைத் திரட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போராடவும் தயங்காது எனவும் எச்சரிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சரை சந்தித்த பிரக்ஞானந்தா.. ரூ.30 லட்சம் பரிசு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.