சென்னை: தரமற்ற உணவு வழங்கிய வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், 'சமீப காலமாக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது மற்றும் சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள் பராமரிக்கப்படுவது தொடர்பாக புகார்கள் வரப்பெற்றன. அதன் அடிப்படையில், கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்களால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஜன.19ஆம் தேதி போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் மேற்கொண்ட திடீர் ஆய்வில் விக்கிரவாண்டி அருகே சாலையின் இருபுறமும் உள்ள வேல்ஸ் உணவகம் பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில், தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் வழங்கியது கண்டறியப்பட்டது. இதனால் வேல்ஸ் உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில், அங்கீகரிக்கப்பட்ட சாலையோர பிற உணவகங்களும் ஆய்வு செய்யப்பட்டு, குறைகள் கண்டறியப்பட்டால், அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனத் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒன்றிய அரசின் மின்சார திருத்த சட்டத்தை ஒருபோதும் திமுக ஏற்காது: அமைச்சர்